ஓட்டுக்கு பணம்தான் வேணும்.. ஈரோட்டில் உடைந்து அழுத மூதாட்டி.. தேற்றிய தேமுதிக சுதீஷ்..என்ன நடந்தது?
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் விஜயகாந்தின் தேமுதிக சார்பில் ஆனந்த் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் தான் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவின் சகோதரரும், தேமுதிக துணை செயலாளருமான எல்கே சுதீஷ் ஈரோடு கிழக்கில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நோட்டீஸ் கொடுத்து ஓட்டு கேட்க சென்ற அவரிடம் மூதாட்டி ஒருவர் ‛பணம் கொடுங்க.. பணம்... பணம்'' என கண்கலங்கிய நிலையில் சுதீஷ் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா இருந்த நிலையில் திடீரென்று கடந்த மாதம் அவர் காலமானார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸில் களமிஙற்கி உள்ளார். அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா உள்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தீவிர பிரசாரம்
வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் என ஏராளமானவர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் திமுக, அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் அங்கு முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என அனைவரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் குவிந்து வீதிவீதியாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேமுதிக தீவிர பிரசாரம்
இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கடந்த 2011 சட்டசபை தேர்தலில் தேமுதிக எந்த இடத்திலும் வெற்றி பெறாத நிலையில் இந்த இடைத்தேர்தலில் களமிறங்கி உள்ளது. கடந்த 2011 தேர்தலில் இந்த தொகுதியில் தேமுதிக சார்பில் சந்திரகுமார் வென்றார். இந்நிலையில் தான் தற்போது ஈரோடு கிழக்கில் தேமுதிக சார்பில் ஆனந்த் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, துணை செயலாளர் எல்கே சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

சுதீசிடம் பணம் கேட்ட மூதாட்டி
இந்நிலையில் தான் ஈரோடு கிழக்கு தொகுதியில் சுதீஷ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கடை அருகே நின்ற ஒரு மூதாட்டியிடம் நோட்டீஸ் வழங்கினார். அப்போது அதனை வாங்காத மூதாட்டி, ‛‛பணம் கொடுங்கள்.. பணம்.. பணம்'' என்றார். இதை கேட்ட சுதீஷ் அதிர்ச்சியடைந்தார். மேலும் அவர் நோட்டீஸை கொடுக்க முயன்றபோது மூதாட்டி கண்கலங்கினார்.

சுதீஷ் என்ன செய்தார்?
இந்த வேளையில், ‛‛நீங்கள் ஓட்டுக்கு பணம் கேட்டீங்களே.. நான் பணம் தருகிறேன். ஓட்டுக்கு ரூ.500 அல்லது ரூ.1000 காசு தருவாங்க. அதை நானே தருகிறேன். பணம் வாங்கினால் உங்களால் எதையுமே கேட்க முடியாது. அதைத்தான் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். இதனால் தான் ஓட்டுக்கு பணம் வாங்காதீங்க என நான் கூறி வருகிறேன்'' என்றார். இதை கேட்ட மூதாட்டி, ‛‛குடிக்கிற கடையை(டாஸ்மாக்) மூடுங்க'' என்றார். இதை கேட்ட சுதீஷ், மூதாட்டிக்கு கைத்தட்டும்படி கூற அங்கிருந்தவர்கள் கைத்தட்டி மூதாட்டியை உற்சாகப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications