ஆஹா உள்குத்து.. இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட்டோடு ஒப்பிட்டு ஈபிஎஸ்ஸை கலாய்த்த காங் எம்பி!கவனிச்சீங்களா
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என எடப்பாடி பழனிச்சாமி கூறியதை நாக்பூரில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியை ஒப்பிட்டு கார்த்தி சிதம்பரம் எம்பி கிண்டல் செய்தார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் இவிகேஎஸ் இளங்கோவன் போட்டிடுகிறார். இவரை ஆதரித்து திமுக அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வரும் நிலையில் இடைத்தேர்தலில் அதிமுக மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என எடப்பாடி பழனிச்சாமி கூறினார். இந்நிலையில் தான் இன்று நாக்பூரில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியுடன் அதிமுகவை ஒப்பிட்டு உள்குத்துடன் கார்த்தி சிதம்பரம் கலாய்த்து பேசினார். இதன் பின்னணியில் உள்ள விஷயம் தற்போது வெளியாகி உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வரும் 27 ம் தேதி நடைபெற உள்ளது. மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவரொவின் தந்தை இவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.
2021 சட்டசபை தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக ஒரு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இந்த தேர்தல் கிடைக்கும் முடிவு என்பது திமுகவின் கடந்த 21 மாத ஆட்சிக்கான மதிப்பெண்ணாக கருதப்படுகிறது. இதனால் இவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெற வைக்க காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து திமுகவும் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறது.

காங்கிரஸ்-திமுகவில் பெரும்படை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக அக்கட்சி சார்பில் நட்சத்திர பேச்சாளர்களாக 34 பேரை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது. இந்த பட்டியலில் மாநில காங்கிரஸ் தலைவர் கேஎஸ்அழகிரி, தமிழக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மூத்த தலைவர் ப சிதம்பரம், மேலிட இணை பொறுப்பாளர் சிரிவெல்ல பிரசாத், தேசிய செயலாளர் செல்லக்குமார் எம்.பி., மாணிக்க தாகூர் எம்.பி., தமிழ்நாடு சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வப்பெருந்தகை, எம்பி, எம்எல்ஏக்கள் என 34 பேர் இடம்பெற்றுள்ளனர். அதேபோல் திமுக சார்பில் 11 அமைச்சர்கள் அடங்கிய 30 பேர் தேர்தல் பணிக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். மேலும் முதல்வர் ஸ்டாலின், அவரது மகனான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பிரசாரம் செய்ய உள்ளனர்.

கார்த்தி சிதம்பரம் பேட்டி
இதற்கிடையே தோல்வி பயத்தால் திமுக போட்டியிடாமல் கூட்டணி தர்மம் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளதாகவும், அதோடு தொடர்ந்து மக்கள் மீதான பயத்தால் தான் பெரும்படையை பிரசாரத்துக்கு திமுக இறக்கி உள்ளதாகவும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் இன்று ஈரோட்டில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

எந்த பயமும் இல்லை
இந்த வேளையில், ‛‛ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் பயத்தால் தான் நிறைய அமைச்சர்கள், தலைவர்களை களமிறக்கி பணப்பட்டுவாடாவை அதிகப்படுத்தி உள்ளதாக அதிமுக குற்றம்சாட்டுகிறதே?'' என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு கார்த்தி சிதம்பரம், ‛‛எங்களுக்கு எந்த பயமும் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடக்கும் முதல் தேர்தல் இது. இதனால் அதன்மீதான ஆர்வம் அதிகமாகி உள்ளது. இதனால் அவர்கள் தங்களின் அமைப்பு ரீதியான பலத்தை காட்டுகிறார்கள். இதில் வேறு எதையும் நினைக்க கூடாது. தேர்தல் முடிவு நல்லவிதமாக இருக்க வேண்டும் என அவர்கள் பணியாற்றுகின்றனர்'' என்றார்.

கிரிக்கெட்டோடு ஒப்பிட்டு விமர்சனம்
இதையடுத்து, ‛ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறாரே'' என கேள்வி கேட்டபோது, சட்டென இடைமறித்த கார்த்தி சிதம்பரம், ‛வெற்றி எங்க.. நாக்பூர் டெஸ்ட் மேட்சிலா?. ஏனென்றால் நாக்பூருக்கும், அவருக்கும் நிறைய சம்பந்தம் உள்ளது. நாக்பூரில் தற்போது ஒரு டெஸ்ட் மேட்ச் நடக்கிறது. இந்த டெஸ்ட் மேட்சில் தான் இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என அவர் சொன்னதாக நினைத்துவிட்டேன். '' எனக்கூறினார். நாக்பூரில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. மேலும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமையிடமாக நாக்பூர் உள்ளதோடு பாஜகவுடன் அதிமுக கூட்டணியிலும் இருப்பதால் தான் இப்படி ஒரு முடிச்சை போட்டு கார்த்தி சிதம்பரம் கலாய்த்துள்ளார்.












Click it and Unblock the Notifications