வேட்பாளர் நான் தான்.. உண்மையிலேயே போட்டியிடுவது ‘காவல் வீரன்’ ஸ்டாலின் - உருகிய ஈவிகேஎஸ் இளங்கோவன்!
முதல்வர் ஸ்டாலின் பற்றியும், தனக்கு முன்பே கை சின்னத்திற்காக பிரச்சாரத்தை தொடங்கிய திமுகவினர் பற்றியும் நெகிழ்ச்சியோடு பேசியுள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
ஈரோடு : "நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தாலும், உண்மையிலேயே இந்த தொகுதியில் போட்டியிடுவது முதல்வர் மு.க.ஸ்டாலின்தான். தமிழ்நாட்டைக் காக்கும் காவல் வீரனாக இருந்து செயல்பட்டு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்" என ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.
அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு அணிகளும் வேட்பாளரைக் களமிறக்கவுள்ளன. மற்ற எந்தக் கட்சியும் வேட்பாளரை அறிவிக்காத நிலையில், முதல் ஆளாக களமிறங்கி பிரச்சாரத்தையும் தீவிரப்படுத்தியுள்ளது திமுக கூட்டணி.
குறிப்பாக திமுக அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பே பிரச்சாரத்தில் இறங்கினர். தற்போது 11 அமைச்சர்கள் இடம்பெறும் குழு தேர்தல் பணிகளுக்காக திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி வேட்பாளர்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். அவருக்கு திமுக கூட்டணி கட்சிகள் மட்டுமல்லாது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் முன்வந்து, நிபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ளது. இந்நிலையில், திமுக கூட்டணி சார்பில் தேர்தல் பணிமனை ஈரோடு பெருந்துறை ரோடு அரசு ஆஸ்பத்திரி அருகில் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார்.

எதையும் எதிர்பார்க்காமல்
அப்போது பேசிய அவர், "இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, கே.எஸ்.அழகிரி ஆகியோருக்கும், என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் அதிக பாசத்தை பொழிந்து வரும், தமிழ் மக்களின் காவலர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என் பெயர் அறிவிப்புக்கு முன்பே எதையும் எதிர்பாராமல் காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்துக்கு ஆதரவாக திமுகவினர் பிரசாரத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள்.

திமுக - காங்கிரஸ் - விசிக வேறுபாடு கிடையாது
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காங்கிரஸ், திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லிம் லீக் என்ற வேறுபாடுகள் கிடையாது. எல்லோரும் மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்டவர்கள். இந்த தேர்தலில் மதச்சார்பற்ற அணியின் வேட்பாளராக போட்டியிடும்போது, தனிப்பட்ட முறையில் துக்கம் அதிகமாக இருந்தாலும் எனது மகன் விட்டுச்சென்ற பணிகளை தொடா்ந்து செய்ய வேண்டும் என்ற ஆவலில் தான் ஒப்புக்கொண்டேன்.

உண்மையில் போட்டியிடுவது ஸ்டாலின்
நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளேன். ஆனால், உண்மையிலேயே இந்தத் தொகுதியில் போட்டியிடுவது முதல்வர் மு.க.ஸ்டாலின்தான். மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்ட அனைவரும் இணைந்து இத்தேர்தலில் நிற்கிறோம். எனது மகன் திருமகன் ஈவெரா விட்டுச்சென்ற பணிகளை தொடர்ந்து செயல்படுத்திட வாக்காளர்கள் எனக்கு வாய்ப்பு கொடுங்கள். எனது மகனைப்போல், எனது தந்தையைப் போல், எனது தாத்தா பெரியாரைப் போல், கண்டிப்பாக மக்களுக்காக உழைப்பேன்.

தமிழ்நாட்டின் காவல் வீரன்
தமிழ்நாட்டுக்கு, தமிழ் மக்களுக்கு, தமிழ் மொழிக்கு, தமிழ் கலாசாரத்துக்கு காவல் வீரராக காத்து கொண்டு இருப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவரது கரத்தை பலப்படுத்தும் வகையில் மிகப்பெரிய வெற்றியை மக்கள் தருவார்கள் என்ற நம்பிக்கை இருந்தாலும்கூட, நாம் மிக பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அதுதான் மு.க.ஸ்டாலினுக்கும், ராகுல் காந்திக்கும் சூட்டுகின்ற மகுடமாக இருக்கும்." எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications