சித்ரா பவுர்ணமி நாளில்! சித்ரகுப்த வழிபாடு ஏன்? பூஜை செய்வது எப்படி?
சென்னை: சித்ரா பவுர்ணமியில் சித்ர குப்தனை வழிபாடு செய்தால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்பது நம்பிக்கை. எமதர்மனின் கணக்கரான சித்ரகுப்தரை ஏன் வழிபாடு செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமியை சித்ரா பவுர்ணமி என்கிறோம். சித்திரை மாதத்தில் சூரிய பகவான் உச்சம் பெற்றும் சித்திரை மாதம் பவுர்ணமி நாளில் சந்திரன் முழுமை அடைந்தும் காணப்படுகிறார்கள். எனவே சித்ரா பவுர்ணமி அன்று மேற்கொள்ளும் தெய்வ வழிபாடுகளுக்கு அதிக பலன் கிடைக்கும்.

சித்ரகுப்தர், எமதர்மனின் கணக்கர். அதாவது யாருடைய விதி முடிய போகிறது என்பதை பாவ புண்ணிய கணக்குகளை வைத்து எமனிடம் சொல்பவர். அத்துடன் இறந்த பின்னர் அந்த ஆன்மா சொர்க்கம் செல்ல வேண்டுமா இல்லை நரகம் செல்ல வேண்டுமா என்பதை தீர்மானிப்பவரும் இவர்தான்.
இத்தகைய சிறப்புகளை பெற்ற சித்ரகுப்தன், சித்ரா பவுர்ணமி நாளில் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. எனவே சித்ரா பவுர்ணமி நாளில் சித்ரகுப்தனை வழிபட்டால் பாவங்களில் இருந்து விடுபடலாம் என்கிறார்கள்.
சித்ரகுப்தனின் பிறப்பு
சித்ரகுப்தனின் பிறப்பு குறித்து பார்க்கலாம். ஒரு சமயம் கயிலாயத்தில் இருந்த பார்வதி தேவி விளையாட்டாக ஒரு அழகிய ஆண் குழந்தையின் சித்திரத்தை வரைந்தார். அப்போது அங்கு வந்த சிவனிடம் அந்த ஓவியத்தை காட்டினார்.
அப்போதுதான் தனது வேலைப்பளுவை குறைக்க தனக்கு ஒரு உதவியாளரை நியமிக்க எமதர்மன், சிவனிடம் வேண்டிக் கொண்டது நினைவுக்கு வந்தது. உடனே தனது மூச்சுக்காற்றை அந்த ஓவியத்திற்கு செலுத்தி உயிர் கொடுத்தார் சிவன்.
சிவசக்தியின் அம்சமாக சித்திரத்தில் இருந்து உயிர் பெற்றதால் அவருக்கு சித்ரகுப்தன் என பெயர். அவர் பிறக்கும்போதே கையில் எழுத்தாணி, ஏடுடன் பிறந்தார் என நம்பப்படுகிறது. சித் என்றால் மனம், குப்த என்றால் மறைவு, மனதில் மறைந்திருக்கும் பாவ எண்ணங்களையும், நல்ல செயல்களையும் கவனித்து அதற்கேற்ப பாவ புண்ணிய கணக்குகளை எழுதி வைக்கிறார்.
இதனால் சித்ரா பவுர்ணமி நாளில் சித்ரகுப்தனுக்கு பூஜை செய்யும் போது எழுத்தாணி, நோட்டு புத்தகம் வைத்து வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை. சித்ரா பவுர்ணமி நாளில் புனித நதிகளில் நீராடிவிட்டு விரதம் இருந்து கோயில்களுக்கு சென்று சித்ரகுப்தரை வழிபட்டால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும். இந்தநாளில் கலவை சாதம் தயார் செய்து நீர் நிலைகளில் நிலாச் சோறு உண்ணும் வழக்கம் உள்ளது.
திதி பார்த்து வழிபட்டால் விதிமாறும் என்பார்கள். விதியை வெல்லும் ஆற்றல் யோகமான திதிகளில் செய்யும் வழிபாட்டுக்கு உண்டு என்பார்கள். அந்த வகையில் அமாவாசை திதியும் பவுர்ணமி திதியும் மிக முக்கியமான திதிகளாகும். இதனால் இந்த திதிகளில் கடவுள் வழிபாடு முக்கியம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications