ஈரோடு அருகே தலைகுனிந்த கெமிஸ்ட்ரி வாத்தியார்.. சுற்றிவளைக்கப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர் .. இது தேவையா
ஈரோடு: தமிழகத்தில் பாலியல் தொடர்பான புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு பாலியல் புகார் தொடர்பான குற்றச்சாட்டு அதிகரித்து வருகிறது. அந்தவகையில், குற்றச்சாட்டுக்கு ஆளாகி, தலைமறைவாக இருந்த ஈரோடு ஆசிரியர் ஒருவர் தற்போது கைதாகி உள்ளார்.
பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, சிறுவர்களுக்கும் பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகிவிட்டது... இதுபோன்ற குற்றச்சாட்டுகளில் சில பெண்களே போக்சோவில் கைதாகி வருவது, வருத்தத்தையும், பீதியையும் ஏற்படுத்தி வருகிறது.. இதில் கைதாகும் பெண்கள், ஆசிரியைகள் என்பது அதைவிட வேதனையான விஷயமாகும்.

தலைநகர் சென்னையில் கடந்த வாரம்கூட ஒரு தமிழ் ஆசிரியர் போக்சோவில் கைதாகியிருந்தார்.. அசோக்நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இந்த கொடுமை நடந்துள்ளது.. அங்கு பணிபுரியும் தமிழ் ஆசிரியரால், மாணவனுக்கு ஆசனவாயில் நோய்த்தொற்று ஏற்பட்டு, உடல் நலம் மோசமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவுக்கு நிலைமை சென்றது.
ஈரோடு கெமிஸ்ட்ரி ஆசிரியர்
இந்த செய்தியின் அதிர்ச்சி அடங்குவதற்குள் ஈரோடு மாவட்ட வேதியியல் ஆசிரியர் மீதான புகார் கிளம்பியது.. ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கெட்டிச்செவியூரில் அரசு மாதிரி மேல்நிலை பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள்.. இங்கு வேதியியல் ஆசிரியராக பணிபுரிபவர் சந்திரசேகரன்.
இவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கொந்தளித்துபோன மாணவிகள் , தலைமை ஆசிரியர் முருகனிடம் இது சம்பந்தமான புகார்களை கொண்டுபோனார்கள்.. உடனே தலைமை ஆசிரியரும், இதுகுறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தந்தார்.. இதையடுத்து, மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் சம்பந்தப்பட்ட பள்ளி மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
தலைமறைவான ஆசிரியர்
அப்போது, மாணவிகளுக்கு ஆசிரியர் சந்திரசேகரன் பாலியல் தொந்தரவு தந்தது உறுதியானது.. பிறகு, இதுதொடர்பாக கோபி மகளிர் போலீஸில் கடந்த நவம்பர் மாதம் தலைமை ஆசிரியர் முருகன் புகார் அளித்தார். மகளிர் போலீசாரும், இந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்தனர்.. ஆனால் அதற்குள் சந்திரசேகரன் தலைமறைவானார். இதனால் அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் சந்திரசேகரன், கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைக்கவும், அங்கு விரைந்து சென்றனர்.. சாம்ராஜ் நகர் பதுங்கியிருந்த ஆசிரியர் சந்திரசேகரனை இன்று சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அடுத்தடுத்து போக்சோவில் கைது
கடந்த வாரம்தான், ஈரோடு, கருங்கல்பாளையம், ஜெயகோபால் வீதியை சேர்ந்த அலாவுதீன் என்ற தமிழ் ஆசிரியர் மீதும் புகார் எழுந்தது.. பிளஸ் 2 படிக்கும் 17 வயது மாணவனுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியும், தனிமையில் சந்திக்குமாறும் அழைப்பு விடுத்து, பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர், குழந்தைகள் நல குழுவின் தொலைபேசி எண் 1098ல் புகார் தந்ததையடுத்து, வழக்குப்பதிந்து போக்சோவில் ஆசிரியர் அலாவுதீனை கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications