ஈரோடு எம்பி கணேசமூர்த்தி காலமானார்! கோவை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது!
ஈரோடு: மதிமுகவை சேர்ந்த ஈரோடு எம்பி கணேசமூர்த்தி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 76.
மதிமுக சார்பில் மூன்று முறை எம்பியாக இருந்த கணேசமூர்த்தி இந்த முறையும் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருந்தார். ஆனால், ஈரோடு தொகுதியை திமுக எடுத்துக்கொண்டது. அதற்கு பதிலாக திருச்சியை ஒதுக்கியது. திருச்சியில், வைகோவின் மகன் துரை வைகோ வேட்பாளராக களமிறக்கப்பட்டார். இதனால் கணேசமூர்த்தி அப்செட்டில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து கடந்த 24ம் தேதியன்று தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

இதனால் ஆபத்தான நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 72 மணி நேர தீவிர கண்காணிப்பில் இருந்த கணேசமூா்த்தி வியாழன் அதிகாலை ஒரு மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். சிகிச்சையில் இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இவரது மறைவு மதிமுகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு இவர் ஈரோடு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு எம்பியாக தேர்வாகியிருந்தார். அப்போதிலிருந்து இவருக்கும், திமுகவினருக்கும் இடையேயான நெருக்கம் அதிகரித்ததாக சொல்லப்படுகிறது. எனவே, இவரிடமிருந்து கட்சியின் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலிலும் எப்படியாவது சீட் வாங்கி ஜெயித்துவிட வேண்டும் என்று கணேசமூர்த்தி திட்டமிட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால், ஈரோடு தொகுதிக்கு பதில், திருச்சியை மதிமுகவுக்கு திமுக ஒதுக்கி கொடுத்தது. இங்கு துரை வைகோ களம் இறங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கணேசமூர்த்தி கடும் அதிர்ச்சிக்குள்ளாகினார். இதனையடுத்து கடந்த 24ம் தேதி ஈரோடு பெரியார் நகரில் உள்ள தனது வீட்டில் சல்பாஸை தண்ணீருடன் கலக்கி குடித்திருக்கிறார். இதனால் சுயநினைவின்றி சரிந்திருக்கிறார். உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அதன் பின்னர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கும், எம்பி சீட் வழங்காததற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மதிமுக நிர்வாகிகள் கூறியுள்ளனர். எம்பி சீட் விவகாரத்தில் துரை வைகோவுக்கு வாய்ப்பு கொடுத்தது தொடர்பாக கட்சி எடுத்த முடிவு குறித்து அவருக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும், கட்சிக்காக பொடா சிறைவாசம் உள்ளிட்ட தியாகங்களைச் செய்திருந்தும், தனக்கு கட்சித்தலைமை உரிய மரியாதை வழங்கவில்லை என்ற ஆதங்கம் அவருக்கு இருந்தது எனவும் மதிமுக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications