போர்க்களமான ஈரோடு.. இரவில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள்.. போலீசார் மீது தாக்குதல்.. என்ன நடந்தது?
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு போலீசார் மீது வடமாநில தொழிலாளர்கள் கும்பல் சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு எண்ணெய் தொழிற்சாலை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நஞ்சை ஊத்துக்குளியில் உள்ள எண்ணெய் தொழிற்சாலை நிறுவனம் ஒன்றில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அங்கு லோட் ஏற்ற வந்த லாரி ஒன்று, வேலை பார்த்துக்கொண்டு இருந்த வடமாநில ஊழியர் மீது மோதி உள்ளது.

மரணம்
வடமாநில ஊழியர் இருப்பது தெரியாமல் ரிவர்ஸ் எடுத்த லாரி.. அவர் மீது மோதியது. இதில் லாரியின் பின் பக்க டயரில் அந்த ஊழியர் சிக்கினார். அங்கேயே உடல் நசுங்கி அவர் பலியானார். இதையடுத்து அங்கு குவிந்த சக வடமாநில ஊழியர்கள் தொழிற்சாலைக்கு முன் போராட்டம் செய்துள்ளனர். அதோடு லாரி டிரைவரை தாக்கி உள்ளனர்.

முடியாது
உடலை எடுக்க கூடாது.. என்று கூறி கடுமையாக போராட்டம் செய்துள்ளனர். இதையடுத்து தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வட மாநில ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பலியான நபருக்கு உள்ள இன்சூரன்ஸ் தொகையான 12 லட்சம் ரூபாயை உடனே தருவதாக தொழிற்சாலை உறுதி அளித்துள்ளது.

காசோலை
ஆனால் எங்களுக்கு வாய்மொழி உத்தரவு வேண்டாம். காசோலைதான் வேண்டும் என்று கூறி வட மாநில ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் செய்துள்ளனர். இறந்தவர் உடலை எடுக்கவும் மறுப்பு தெரிவித்து போராட்டம் செய்தனர். போராட்டம் முற்றவே அந்த லாரியை வட மாநில ஊழியர்கள் அடித்து உடைத்தனர். பின்னர் தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தினர்.

போலீசார்
இதையடுத்து போலீசார் அதை தடுக்க முயன்றனர். ஆனாலும் கும்பலாக சேர்ந்து வட மாநில ஊழியர்கள் போலீசாரையும் தாக்கினார்கள். இதில் 7 போலீசார் வரை படுகாயம் அடைந்துள்ளனர். இதையடுத்து 30க்கும் அதிகமான வட மாநில ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு 300க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வட மாநில ஊழியரின் மரணம், அதை தொடர்ந்த போலீசார் மீதான தாக்குதல் பற்றி மாவட்ட கண்காணிப்பாளர் சசி மோகன் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications