ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. நாம் தமிழர் வேட்பாளர் மேனகா மீது பல பிரிவுகளில் போலீஸ் வழக்குப்பதிவு
ஈரோடு கிழக்கு நாம் தமிழர் வேட்பாளர் மேனகா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபைத் தேர்தலில் நேற்று நாம் தமிழர் வேட்பாளர் மேனகா வழக்குப்பதிவு செய்த நிலையில், அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டசபை உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜன.4ஆம் தேதி எதிர்பாராத விதமாக மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
கடந்த ஜன.31ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், பல்வேறு தரப்பினரும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். வரும் பிப.7ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு
வரும் பிப். 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து வரும் மார்ச் 02-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் பிரசாரத்தைத் தீவிரப்படுத்திவிட்டன. திமுக கூட்டணியில் காங்கிரஸில் இருந்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தேர்தலில் களம் காண்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சோதனை
தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், கண்காணிப்பைத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. பறக்கும் படை , கண்காணிப்புக் குழு , நிலை கண்காணிப்புக்குழுக்கள் அமைத்துள்ள தேர்தல் நடத்தும் அலுவலர், அப்பகுதியில் வாகன சோதனைகளையும் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி மொத்தம் 35 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது.

பார்வையாளர்கள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பொதுப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சிக்கிமை சேர்ந்த ஐஏஸ் அதிகாரி ராஜ்குமார் யாதவ் மற்றும் காவல் பார்வையாளராக மேற்கு வங்க ஐபிஎஸ் அதிகாரி சுரேஷ் குமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பிப்ரவரி 7 முதல் பார்வையாளர்களாகச் செயல்பட உள்ளனர். மேலும், பிப்ரவரி 13 முதல் ஈரோடு கிழக்கு தொகுதியில் 2 கம்பெனி மத்திய படை பாதுகாப்பு போடப்படும் என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி வழக்கம் போல இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. அதன்படி இந்தத் தேர்தல் நாம் தமிழர் சார்பில் வேட்பாளராக மேனகா அறிவிக்கப்பட்டார். மேனகா நேற்று கட்சி தொண்டர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக வேட்பு மனுத் தாக்கல் செய்ய அவர் நாம் தமிழர் கட்சியினருடன் ஊர்வலமாகச் சென்றார். ஊர்வலமாகச் செல்லக் கூடாது என்று போலீசார் அறிவுறுத்தினர். இதையடுத்து நான்கு பேருடன் மட்டும் சென்று மனுத்தாக்கல் செய்தனர்.

வழக்கு
இந்தச் சூழலில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது, அனுமதி இல்லாமல் பேரணி செல்வது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நாம் தமிழர் வேட்பாளர் மேனகா மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் அங்குச் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications