விஜய்க்கு ஷாக்.. ஈரோடு தவெக பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்க எதிர்ப்பு.. அறநிலையத்துறை இடமாமே
ஈரோடு: ஈரோடு விஜயமங்கலம் பகுதியில் டிசம்பர் 18ம் தேதி தவெக தலைவர் விஜய் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்கான இடத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தேர்வு செய்துள்ளார். தற்போது அந்த இடத்தில் பணிகள் தொடங்கி உள்ள நிலையில் அது விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம். இதனால் அங்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க கூடாது என்று கோவிலின் செயல் அலுவலர் தனலட்சுமி மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்பிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனால் விஜயின் பொதுக்கூட்டம் திட்டமிட்டப்படி நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் சமீபத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்தார். அதிமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்ட நிலையில் தவெகவில் ஐக்கியமானார். செங்கோட்டையனுக்கு 2 முக்கிய பதவிகள் வழங்கப்பட்டது. நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்புச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இதையடுத்து ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பொதுக்கூட்டத்துக்கு அவர் ஏற்பாடு செய்து வருகிறார். தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் அவர் இந்த பொதுக்கூட்டத்துக்கு திட்டமிட்டுள்ளார். டிசம்பர் 14ம் தேதி பொதுக்கூட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தையொட்டி அரசியல் கட்சியினர் பிரசார கூட்டங்களுக்கு கோர்ட் உத்தரவுப்படி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து பொதுக்கூட்டம் தேதி டிசம்பர் 18 ஆக மாற்றம் செய்யப்பட்டது. மேலும் விஜயமங்கலம் பகுதியில் விஜய் பொதுக்கூட்டத்தை டிசம்பர் 18 ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது. அங்கு சுமார் 19 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில் தான் அந்த இடத்தை சுட்டிக்காட்டி அனுமதி கோரப்பட்டுள்ளது.
இப்படியான சூழலில் தான் தவெகவினர் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டிருக்கும் இடம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடமாக இருப்பதால் பிரசார கூட்டம் நடத்துவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த இடம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள விஜயபுரி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 31 ஏக்கர் பரப்பளவில் ஒரு பகுதியாக இருக்கிறது. இதனால் அங்கு தவெகவினரோ அல்லது மற்ற அரசியல் கட்சிகளோ, பொதுக்கூட்டங்களோ, அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளோ நடத்த அனுமதி வழங்க கூடாது என்று கலெ க்டர், எஸ்பிக்கு விஜயபுரி கோவிலின் செயல் அலுவலர் தனலட்சுமி கடிதம் எழுதி உள்ளார்.
இதனால் ஈரோட்டில் டிசம்பர் 18 ம் தேதி திட்டமிடப்பட்ட நடிகர் விஜயின் பொதுக்கூட்டத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications