''கொங்கு நாட்டுக்கு பாஜக என்ன கிழித்தது?''.. கொங்கு மண்டல எழுச்சி மாநாட்டில் ஈஸ்வரன் ஆவேசம்!
ஈரோடு: 4 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள பாஜக, கொங்குநாட்டுக்காக என்ன கிழித்தது என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஆவேச கேள்வி எழுப்பியுள்ளார்.
தங்களை பார்த்து 1 எம்.பி., 1 எம்.எல்.ஏ.வை வைத்து என்ன கிழிக்கப் போகிறீர்கள் எனக் கேட்டார்கள் என்றும் எப்படியெல்லாம் தனது கட்சியை அவமானப்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் அவமானப்படுத்தினார்கள் எனவும் வேதனை தெரிவித்த ஈஸ்வரன், தாம் பார்க்காத தோல்விகளே இல்லை என்றார்.

சட்டசபைக்கு தனியொருவனாக தாம் செல்லும் போது, படும் பாடு தனக்குத் தான் தெரியும் என்றும் தனியாக சட்டசபை செல்வதை விட தன்னுடன் 10 தம்பிமார்களை சட்டமன்ற உறுப்பினர்களாகி அவர்களையும் அழைத்துச் செல்வது தனக்கு பெருமையாக இருக்கும் எனவும் பேசினார்.
தாம் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் தன்னை தேர்வு செய்தால் தொகுதி மக்களுக்கு நல்லது என்றும் வெற்றிபெற வைக்காவிட்டால் தனக்கும், தனது குடும்பத்துக்கும் நல்லது என பேசினார். தேர்தலில் வெற்றி தோல்வியை சமமாக பார்க்கக் கூடிய பக்குவம் இருப்பதாக தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற கொங்கு மண்டல எழுச்சி மாநாட்டில் பேசிய போது அவர் இவ்வாறு கூறினார். கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை ஈரோடு தொகுதியில் போட்டியிட விரும்பும் எனத் தெரிகிறது. இதனால் தான் ஈரோடு பெருந்துறையில் இப்படியொரு பிரம்மாண்ட மாநாட்டை இன்று நடத்தியுள்ளார் ஈஸ்வரன்.
வரும் 12ஆம் தேதி திமுக தொகுதி பங்கீட்டு குழு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதால் அன்றைய தினம் பேசும் போது, கொங்கு மண்டல எழுச்சி மாநாட்டில் எத்தனை பேர் கலந்துகொண்டார்கள், எந்தெந்த பகுதிகளில் எல்லாம் கொ.ம.தே.க. வலிமையோடு இருக்கிறது என்பது குறித்த டேட்டாவோடு ஈஸ்வரன் கலந்துகொள்வார் என எதிர் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications