தழுதழுத்த ஈவிகேஎஸ்.. “என் மகன் தூங்காமல்!” திருமகனை நினைத்து ஈரோடு கிழக்கு பிரச்சாரத்தில் உணர்ச்சி
திருமகன் ஈவேரா பாதாள சாக்கடை திட்ட பணி நடைபெற்றபோது நள்ளிரவு வரை தூங்காமல் விழித்திருந்து பணிகளை கவனித்ததாக ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசினார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தன்னுடைய மகன் பாதாள சாக்கடை திட்ட பணி நடைபெற்றபோது நள்ளிரவு வரை தூங்காமல் விழித்திருந்து பணிகளை கவனித்ததாக உணர்ச்சிகரமாக பேசினார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவேரா, கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனாவார்.
இதையடுத்து தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு தொகுதியை காலியானதாக அறிவித்தது. அதை தொடர்ந்து பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

திமுக கூட்டணி வேட்பார்
இந்த தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே திமுக கூட்டணி சார்பில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. திருமகன் ஈவேராவின் தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவனை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவித்து உள்ளது. இதை தொடர்ந்து அவர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

மற்ற கட்சி வேட்பாளர்கள்
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் திமுக கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்து இருக்கிறது. தேமுதிக வேட்பாளராக ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா, அமமுக வேட்பாளராக சிவபிரசாந்த் ஆகியோரை அந்த கட்சிகளின் தலைமை அறிவித்தது. ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம் காட்டியது.

அதிமுக வேட்பாளர் தென்னரசு
இந்த நிலையில் கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமி தரப்பு கே.எஸ்.தென்னரசுவையும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு செந்தில் முருகனையும் அதிமுக வேட்பாளராக அறிவித்தனர். இதனால் இரட்டை இலை சின்னம் முடங்கும் சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில், தேர்தலில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் அறிவித்தார். இதையடுத்து அதிகாரப்பூர்வ வேட்பாளராக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டார் தென்னரசு.

77 வேட்பாளர்கள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி 7 ஆம் தேதி நிறைவடைந்தது. இதற்கிடையே தங்களுக்கு டிடிவி தினகரன் அமமுகவிற்கு தேர்தல் ஆணையம்குக்கர் சின்னத்தை ஒதுக்காததால் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தார். வேட்புமனு பரிசீலனை நிறைவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் சுயேட்சைகள் உட்பட 77 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

கை - இரட்டை இலைக்கு போட்டி
ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தமிழ்நாடு அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன் ஆகியோர் ஈரோட்டில் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

இளங்கோவன் உணர்ச்சிகரம்
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் கிருஷ்ணா தியேட்டர் அருகே நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய ஈவிகேஎஸ் இளங்கோவன், "மணிக்கூண்டு மையப் பகுதியில் நெடுங்காலமாக தீராத பிரச்சினையாக பாதாள சாக்கடை பிரச்சனை இருந்தது. இந்த பகுதியில் எனது மகன் நடு இரவு வரை விழித்திருந்து தன் கண் பார்வையில் இதை செயல்படுத்தினார். எனது மகன் விட்டுச் சென்ற பணியை தொடர எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்." என்று உணர்ச்சிகரமாக பேசினார்.












Click it and Unblock the Notifications