கொண்டாடும் மனநிலை இல்லை.. ஒருபுறம் வெற்றி.. மறுபுறம் சோகம்.. மகனை நினைத்து உருகிய ஈவிகேஎஸ் இளங்கோவன்
வெற்றியை கொண்டாடும் மனநிலையில் நான் இல்லை எனக் கூறியுள்ளார் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
ஈரோடு : "பெரிய வெற்றி தான் என்றாலும், அதை கொண்டாடும் மனநிலையில் நான் இல்லை. என் மகன் விட்டுச் சென்ற பணியை செய்ய வேண்டும்" என உருக்கமாகப் பேசியுள்ளார், ஈரோடு கிழக்கில் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அதிமுக சார்பில் தென்னரசுவும் உள்ளனர். நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதனும், தேமுதிக சார்பில் ஆனந்த் என 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். ஆறு சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் 53,735 வாக்குகளும், அதிமுக 20,041 வாக்குகளும் பெற்றிருந்தன. சுமார் 33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலையில் உள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளார் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால் திமுக - காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பின்னடைவைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு வாக்கு மையத்தில் இருந்து விரக்தியுடன் விறுவிறுவென வெளியேறினார். இந்த இடைத்தேர்தலில் பணநாயகம் வென்றுள்ளதாக குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், "வெற்றி விழாக்கள் நடத்தவோ, முழுமையான வெற்றியை கொண்டாடும் மனநிலையிலோ நான் இல்லை. எனது மகன் விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்து செய்வேன். வெற்றி பெறுவேன் என்பது ஒரு மாதத்திற்கு முன்பே தெரியும். இந்த வெற்றி நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி. 20 மாத ஆட்சிக் காலத்தில் 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிய முதலமைச்சருக்கு இந்த வெற்றி ஊக்கத்தை தரும்.
ஈரோட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் முதல்வர் உறுதுணையுடன் நிறைவேற்றுவேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான சட்டப்பேரவையில் பங்கேற்பது பெருமையாக உள்ளது. ஸ்டாலின் என்னைவிட வயதில் சிறியவர் என்றாலும், அனுபவத்திலும், செயல்திறனிலும் பன்மடங்கு உயர்ந்தவர். அவருடன் பேரவையில் நெருக்கமாக இருக்கக்கூடிய நிலையை நினைத்து நான் பெருமை அடைகிறேன்.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும். திமுக அமைச்சர்கள் அவர்கள் தேர்தலில் நின்றபோது கூட இவ்வளவு உழைத்தார்களா என தெரியவில்லை. கடுமையாக உழைத்தார்கள். காலை, மாலை என வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்தார்கள். அவர்களுக்கு மிக்க நன்றி. பெரிய வெற்றிதான் என்றாலும், அதை கொண்டாடும் மனநிலை தான் இல்லை. மகன் விட்டுச் சென்ற பணியை செய்ய வேண்டும் என்ற மன நிலையில் தான் உள்ளேன்." என உருக்கமாகத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications