திமுகவுக்கு பயம் வந்துவிட்டது.."காற்றை போல அதிமுகவின் வெற்றியை எவராலும் தடுக்க இயலாது" இபிஎஸ் பஞ்ச்
குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தலாக இந்த இடைத்தேர்தல் இருக்க வேண்டும் என்று அதிமுக கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
ஈரோடு: கூட்டணி கட்சிக்காக 20 அமைச்சர்களை இறக்கி விட்டு இருக்கிறார்கள். திமுக நிற்கவில்லை. கூட்டணி கட்சியான காங்கிரஸ்தான் போட்டியிடுகிறது. அவ்வளவு பயம் வந்துவிட்டது. இந்த பயமே வெற்றிக்கு அறிகுறி என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தரப்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் அமைச்சர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் ஈரோடு பெருந்துறைரோடு வேப்பம்பாளையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி பேசினார்.

எடப்பாடி பழனிசாமி பேச்சு
இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், பாஜக நிர்வகிகள், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி உள்பட அதிமுக கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் வைக்கப்பட்டு இருந்த மேடையின் பின்புறம் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தலைவர்களின் படமும் இடம் பெற்றிருந்தது. அந்த வகையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை படமும் பேனரில் இடம் பெற்றிருந்தது. தொடர்ந்து வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

துரும்பை கூட கிள்ளி போடவில்லை
வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் நம்முடைய கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும். அதற்காக நாம் இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும். தேனீக்களை போல எறும்புகளை போல சுறுசுறுப்பாக உழைத்து ஒரு வாக்கு கூட வீணாகாமல் சிந்தாமல் சிதறாமல் தேர்தல் பணியாற்ற வேண்டும். ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று 21 மாதங்கள் நிறைவு ஆகிவிட்டது. 21 மாதத்தில் இந்த தொகுதியில் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை.

எம்.ஜி.ஆர் ஆட்சியில் தான்
ஸ்டாலின் ஆட்சியில் ரவுடிகள் அட்டகாசம், கட்டபஞ்சாயத்து, எங்கே பார்த்தாலும் போதைப்பொருள் விற்பனை. இதுதான் திமுகவின் சாதனை. மக்களுக்கு என்று எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. எம்.ஜி.ஆர் ஆட்சியில் தான் ஈரோடு மாவட்டம் என்ற புதிய மாவட்டம் உருவானது. ஈரோடு மாவட்டம் வளர்ச்சி பெறுவதற்கு அடித்தளம் அமைத்த கட்சி அதிமுக. காற்றை தடுக்க முடியாது அதேபோல அதிமுகவின் வெற்றியை எவராலும் தடுக்க முடியாது.

மின் கட்டண உயர்வு
தேர்தல் ஜூரம் வந்துவிட்டது. கூட்டணி கட்சிக்காக 20 அமைச்சர்களை இறக்கி விட்டு இருக்கிறார்கள். திமுக நிற்கவில்லை. கூட்டணி கட்சியான காங்கிரஸ்தான் போட்டியிடுகிறது. அவ்வளவு பயம் வந்துவிட்டது. இந்த பயமே வெற்றிக்கு அறிகுறி. விண்ணை முட்டும் அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மின்சாரத்தை தொட்டால்தான் ஷாக் அடிக்கும் இன்றைக்கோ மின் கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. மின் கட்டண உயர்வால் தொழில் பாதித்துள்ளது.

குடும்பத்தை பற்றித்தான் சிந்திக்கிறார்
சொத்து வரி ஏற்ற மாட்டோம் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லிவிட்டு வீடுகளுக்கு 100 சதவீதமும் கடைகளுக்கு 150 சதவீதமும் சொத்துவரியை ஏற்றிவிட்டார்கள். எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளுங்கள்.. ஏனெனில் அது உங்கள் பணம்தான். பொதுமக்களின் பணம். கொள்ளையடித்து வைத்து இருக்கிறார்கள். கொள்ளையடித்து வைத்த பணத்தை வாரி இறைக்கிறார்கள். திறமையற்ற முதல்வர் ஸ்டாலின் நாட்டை பாழ்படுத்தி வருகிறார். நாட்டில் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் முதல்வர் எப்போதும் குடும்பத்தை பற்றித்தான் சிந்திக்கிறார். நாட்டு மக்களைப் பற்றி அல்ல.












Click it and Unblock the Notifications