ஈரோடு அருகே கோபியில் கையும் களவுமாக சிக்கிய ஆபீசர்.. ஆடிப்போன அரசு ஊழியர்கள்
ஈரோடு: அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் சிக்கி கொண்டால், அவர்கள் ஓய்வு காலம் வரை சிக்கலில் சிக்கவே வாய்ப்பு உள்ளது. அதுவும் வயதான காலத்தில் சிக்கினால், ஓய்வு காலத்திற்கு பிறகு சிறையில் தான் காலத்தை கழிக்க வேண்டியதிருக்கும். ஏனெனில் லஞ்சம் வாங்கி கைதாகும் அரசு ஊழியர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. புதிய கட்டிடம் கட்ட அனுமதி சான்று வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கோபி நகராட்சி உதவியாளர் சுப்பிமணியன் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் மாவட்டங்களில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்.. அப்படி புகார் அளித்தால் டிஎஸ்பி தலைமையிலான அதிகாரிகள், புகாரின் உண்மை தன்மையை உறுதி செய்த பின்னர், அவர்கள் கேட்டுகும் லஞ்சப்பணத்தை ரசாயனம் தடவிய நோட்டுகளாக கொடுத்து அனுப்பி வைப்பார்கள். புகார் தந்த நபர் அந்த பணத்தை குறிப்பிட்ட அதிகாரியிடம் அல்லது அவர் கூறும் நபரிடம் அளிப்பார். அப்போது மறைந்திருக்கும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்வார்கள்.. அப்படித்தான் ஈரோடு மாவட்டம் கோபியில் அரசு அதிகாரி சிக்கியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை சேர்ந்த 48 வயதாகும் சுப்பிரமணியம் என்பவர், ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சி அலுவலகத்தில் நகரமைப்பு பிரிவில் கடந்த 10 ஆண்டுகளாக உதவியாளராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கோபியை சேர்ந்த சிவில் என்ஜினியரான வருண் என்பவர் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி சான்று கேட்டு சுப்பிரமணியத்திடம் விண்ணப்பித்து இருந்தார். அதற்கான கட்டிட வரைபடத்தையும் ஒப்படைத்திருந்தார்.
அதைப்பெற்றுக்கொண்ட நகரமைப்பு பிரிவு அதிகாரி சுப்பிரமணியம் அனுமதி சான்று வழங்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என்று வருணிடம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு வருண் மறுத்துள்ளார். இறுதியில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் தந்தால்தான் சான்று தர முடியும் என்று சுப்பிரமணியம் உறுதியாக கூறினாராம். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத வருண் இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்சம் கேட்ட சுப்பிரமணியத்தை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தார்கள். அதன்படி ரசாயனம் தடவிய ரூ.30 ஆயிரத்தை வருணிடம் கொடுத்து சுப்பிரமணியத்திடம் தரச்சொல்லி அனுப்பியுள்ளார்கள், அதன்படி நேற்று காலை கோபி நகராட்சி அலுவலகத்துக்கு சென்ற வருண் ரசாயனம் தடவிய ரூ.30 ஆயிரத்தை சுப்பிரமணியத்திடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஎஸ்பி ஆறுமுகம் தலைமையிலான போலீசார் சுப்பிரமணியத்தை சுற்றிவளைத்து கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.30 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் கோபி நகராட்சி அலுவலகத்தில் நேற்று அதிகாரி கையும் களவுமாக சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications