வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்.. எடப்பாடியை டென்சனாக்கிய செந்தில் பாலாஜி.. ஈரோட்டில் மெகா வியூகம்
ஈரோடு: வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்.. அதிமுகவினரால் அதிகம் வெறுக்கப்படும் செந்தில் பாலாஜி, ஈரோட்டில் நேற்றைய கூட்டத்தில் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக எடப்பாடி பழனிசாமியால் நேரடியாக விமர்சிக்கப்பட்டவர் என்றால் அது செந்தில் பாலாஜி. ஒரு காலத்தில் அதிமுகவில் அமைச்சராக இருந்த இவர் தான், இப்போது ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக இருக்கிறார்.
சட்டசபை தேர்தலில் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக வெல்ல காரணமாக இருந்தது செந்தில் பாலாஜி தான் என்கிறது திமுக வட்டாரம். அதனால் தான் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது என்றெல்லாம் அப்போது பேசப்பட்டது. சரி விஷயத்திற்கு வருவோம்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெற வைக்கும் பொறுப்பு செந்தில் பாலாஜி வசம் ஒப்படைக்கப்பட்டதாக அறிவாலய வட்டாரங்கள் சொல்கின்றன. செந்தில் பாலாஜியும் பம்பரமாக வேலை செய்து வருகிறார். கொங்கு மண்டலத்தில் திமுகவை பலப்படுத்தும் பொறுப்பும் செந்தில் பாலாஜி வசம் தான் உள்ளது.

ஈரோடு தேர்தல்
இந்த சூழலில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் அங்குள்ள ஒவ்வொரு வார்டுகளையும் அலசி ஆராய்ந்து அங்கு என்ன செய்ய வேண்டும், எப்படி ஓட்டுக்களை சேகரிக்க வேண்டும் பிளானை தயாரித்திருக்கிறதாம் செந்தில் பாலாஜி தலைமையிலான டீம். காங்கிரஸ் கரைவேட்டிகளை விட திமுக கரைவேட்டிகள் அதிக அளவில் இறங்கி வேலை செய்ய செந்தில் பாலாஜிதான் முக்கிய காரணமாம். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதுதான் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பணியாம். அதிமுகவை டெபாசிட் கூட வாங்கவிடாமல் செய்ய வேண்டும் என செந்தில் பாலாஜி தலைமையிலான திமுகவினர் முனைப்பு காட்டி வருகிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதிக்குள் ஒவ்வொரு தெருவாக தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார் செந்தில் பாலாஜி, கூட்டத்தில் ஆள் சேர்ப்பது முதல் வார்டு பணிகள் வரை தீவிரமாக கவனித்து வருகிறராம்.

பொறுத்திருந்து பாருங்க
அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஒரு மணிமகுடமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றியை வழங்குவதற்கு வாக்காள பெருமக்கள் தயாராக இருக்கிறார்கள். காரணம் என்னவென்று பார்த்தீர்கள் என்றால், ஈரோடு மாநகராட்சிக்கு அடிப்படை வசதிகளுக்காக 450 கோடி ரூபாய் நிதிகளை ஒதுக்கி முதல்வர் ஸ்டாலின் அரசாணை வெளியிட்டிருந்தார். இந்த தேர்தல் முடிந்த பின்னர் டெண்டர் முடிந்து பணிகளை விரைவாக தொடங்க தயாராக இருக்கிறார்கள் என்றார். அப்போது செய்தியாளர் ஒருவர், முதல்வர் ஸ்டாலின் வருகைக்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது என்றும் ஏதேனும் அறிவிப்புகள் வெளியிட வாய்ப்பு உண்டா என்றும் கேள்வி எழுப்பினார். அதற்கு செந்தில் பாலாஜி, பொறுத்திருந்து பாருங்க என்று சிரித்துக்கொண்டே கூறிவிட்டு சென்றார்.

சூப்பர் முதல்வர்
இதற்கிடையே அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிகாரிகளை கடுமையாக எச்சரித்து பேசினார். நாளைக்கே ஆட்சி மாறும், காட்சிகளும் மாறும் என்று பேசினார். அப்படி பேசியதற்கு முக்கிய காரணம் செந்தில் பாலாஜி பேச்சை கேட்டு செயல்படுவதுதான் காரணம் என்றும் அதனால் தான் அப்படி பேசினார் என்றும் அதிமுகவினர் குற்றம்சாட்டுகிறார்கள். எடப்பாடி நேற்றைய கூட்டத்தில் பேசும் போது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முதல்வர் ஸ்டாலின் மீது வைத்தார். அப்போது தமிழகத்தில் ஒரு பொம்மை முதலமைச்சர்தான் ஆட்சி செய்து வருவதாகவும், கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் ஆகியவற்றில்தான் சூப்பர் முதல்வராக இருக்கிறார் என்றும் கூறினார்.

கடும் விமர்சனம்
முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரை யார் அதிகமாக கமிஷன் தருகிறாரோ அவர்தான் சிறந்த அமைச்சர் என்று கூறுவார் என்றும் அப்படிப்பட்ட ஓர் அமைச்சர் இந்தத் தொகுதியில் தேர்தல் பணிபுரிந்துவருகிறார் என்றும் செந்தில் பாலாஜியை மறைமுகமாக விமர்சித்தார். செந்தில் பாலாஜிக்கு மக்கள் பணி செய்வதில் விருப்பம் இல்லை என்றும மக்களுக்கு ஆசைகாட்டி, பணம் தருவதாகக் கூறி ஒரு குடோனில் அடைத்துவைத்திருக்கிறார் என்றும் அனைத்துத் தேர்தல் விதிமுறைகளும் மீறப்படுகின்றன. இந்த விதிமீறல்களுக்கு காவல்துறையும், அதிகாரிகளும் துணைபோகின்றனர். அரசு அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும். நாளை ஆட்சி மாறலாம். தற்போது மக்களுக்கு எதிராகச் செயல்படும் அதிகாரிகள் எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டியதிருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி எச்சரித்தார். இதனிடையே முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் விரைவில் பிரச்சாரம் மேற்கொள்ள வர உள்ளார்கள். அப்போது பெரிய அளவில் பிரச்சார வியூகங்களை செந்தில் பாலாஜி முன்னெடுப்பார் என்றும் எடப்பாடிக்கு நிச்சயம் அது சவாலாக இருக்கும் என்றும் திமுகவினர் சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications