உதயநிதி ஸ்டாலினை குழந்தையாகவே பார்க்கிறேன்.. பண்பட்டவராக பார்க்கவில்லை.. ஜெயக்குமார் விமர்சனம்!
உதயநிதி ஸ்டாலினை குழந்தையைப் போலவே பார்ப்பதாக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குழந்தை போன்றவர் என்றும், அவரை பண்பட்டவராக பார்க்கவில்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அதேபோல், அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை தவிர்த்து யார் வந்தாலும் அரவணைப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவிற்கு இன்னும் சில நாட்களே உள்ளது. இதனால் திமுக கூட்டணி, அதிமுக, தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஈரோடு வந்தார்.
ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து ஜெயக்குமார் கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக அரசு ஜனநாயகத்தை தோற்கடித்து புதைத்து பணநாயகத்தை கொள்ளையடித்து வருகிறது. ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் பணத்தை வாரி இறைக்கிறார்கள். வீட்டுக்கு வீடு குக்கர், கொலுசு, பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. குறுக்கு வழிகளில் தேர்தலை எதிர்நோக்கி வருகிறார்கள்.

ஜெயக்குமார் பேட்டி
குடும்பத் தலைவிகளுக்கான ஆயிரம் ரூபாய் உரிமை தொகை இதுவரை வழங்கவில்லை. ஆனால் தேர்தல் வருவதையொட்டி அமைச்சர் உதயநிதி இன்னும் ஐந்து மாதத்தில் உரிமை தொகை வழங்கப்படும் என்கிறார். இதை எப்படி நம்புவது. செங்கல் நாயகன் ஆட்சிக்கு வந்ததும் நீட்டுக்கு விலக்களிப்பதாக கூறினார். ஆனால் இப்போது வரை ஒன்றும் செய்யவில்லை. நூல் விலை உயர்வால் 40% தொழில்கள் முடங்கிப் போய் உள்ளன. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.

அராஜகம்
காவல்துறை, ராணுவம், பொதுமக்கள் என அனைவருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. என்னை பார்த்த பெண்மணி ஒருவர் திமுகவினர் தேர்தலுக்காக பணத்தை வாரி வாரி இறைக்கிறார்கள். நீங்கள் கவலைப்பட வேண்டாம் எங்கள் ஓட்டு உங்களுக்கு தான் என்கிறார். மக்கள் மத்தியில் இரட்டை இலைக்கு வரவேற்பு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் திமுகவினர் சர்வாதிகாரி போன்று அராஜகத்தை அரங்கேற்றி வருகின்றனர் என்று கூறினார்.

உதயநிதி ஒரு குழந்தை
தொடர்ந்து, 150 இடங்களில் பட்டியில் மாடுகளை அடைப்பது போல் மக்களை அடைத்து வைத்துள்ளார்கள். பல கோடி ரூபாய்களை வாரி இறைத்துள்ளனர். மாவட்ட தேர்தல் ஆணையர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறார். திமுகவினர் ஆட்சிக்கு வந்து 21 மாதங்கள் ஆகிறது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக அவர்கள் எத்தனை முறை டெல்லி சென்றார்கள். எத்தனை பேரை சந்தித்து அழுத்தம் கொடுத்தார்கள். உதயநிதி ஒரு குழந்தை போன்றவர். பண்பட்டவராக அவரை நான் பார்க்கவில்லை. செங்கலை காட்டினாலும், இம்முறை மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

நீட் தேர்வு
தொடர்ந்து, கள்ள ஓட்டு போட்டவரை பிடித்துக் கொடுப்பதற்காக எனக்கு கிடைத்த பரிசு சிறை தண்டனை. இரவு 11 மணிக்கு வந்து என்னை கைது செய்தனர். உடைமாற்றி வருகிறேன் என்று சொன்னால் கூட கேட்காமல் என்னை கைது செய்தனர். இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை. திமுக அரசு கல்வி பாடத்திட்டத்தை பொதுப்பட்டியிலிருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டியது தானே. ஆனால் அவர்கள் அவர் செய்ய மாட்டார்கள். எங்களைப் பொறுத்தவரை நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் எங்கள் கொள்கை என்று கூறினார்.

அரவணைப்போம்
தொடர்ந்து, ஓபிஎஸ் அணியினர் இபிஎஸ் அணியில் இணைந்தது பற்றிய கேள்விக்கு, ஓ.பன்னீர்செல்வம் களத்திலேயே இல்லை. அவர் பின்னால் இனிமேல் யாரும் இருக்க மாட்டார்கள். அதிமுகவிற்கு ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் இவர்களை தவிர யார் வந்தாலும் அவர்களை அரவணைத்து ஏற்றுக் கொள்வோம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications