7 கிமீ நடந்தே சென்று பிரச்சாரம் செய்த துரை வைகோ! நெகிழ்ந்து கண்கலங்கிய ஈவிகேஎஸ் இளங்கோவன்!
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்காக 7 கிமீ நடந்தே சென்று பிரச்சாரம் செய்த துரை வைகோ.
ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்காக 7 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று வாக்கு சேகரித்திருக்கிறார் மதிமுக தலைமைக்கழகச் செயலாளர் துரை வைகோ.
தனக்காக ஈரோடு வந்து இவ்வளவு தூரம் நடந்தே சென்று துரை வைகோ வாக்கு சேகரித்ததை அறிந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் நெகிழ்ந்து போய் கண் கலங்கியிருக்கிறார்.
ஒரு காலத்தில் வைகோவை தாம் கடுமையாக சாடியதும் ஆனால் அதையெல்லாம் பெரிதுபடுத்தாமல் துரை வைகோ பிரச்சாரத்திற்கு வந்திருப்பதும் இளங்கோவனை நெகிழ வைத்திருக்கிறது. ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரம் குறித்து துரை வைகோ கூறியிருப்பதாவது;

ஈரோட்டில் துரை வைகோ
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அண்ணன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து ஒரு நாள் முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டேன்.முன்னதாக, காலை 9 மணியளவில் அண்ணன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இல்லத்திற்கு நேரில் சென்று, அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்தேன்.

7 கிலோ மீட்டர்
அதற்கடுத்து, ஈரோடு பேருந்து நிலையத்தில் தொடங்கி சத்தி ரோடு, கிருஷ்ணா தியேட்டர், சராப் கடை வீதி, பன்னீர்செல்வம் பார்க், ஈஸ்வரன் கோவில் வீதி வழியாக மணிக்கூண்டு பகுதி வரை 7 கிலோ மீட்டர் தூரம் நடைபயணமாக சென்று பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டினேன். இப்பயணத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றார்கள்.

எழுச்சி -வரவேற்பு
இப்பயணத்தின் இடையே ஏராளமான தி.மு.க நிர்வாகிகளும், மாவட்டச் செயலாளர்களும் பயணத்தின் போது என்னை நேரில் சந்தித்து வாழ்த்தும், நன்றியும் தெரிவித்தார்கள். இறுதியாக, மாலை 6 மணிக்கு திருநகர் காலனி மற்றும் வண்டிப்பேட்டை பி.பி.அக்ரஹாரம் ஆகிய இரண்டு இடங்களில் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். பொதுமக்களிடம் நல்ல வரவேற்பும், எழுச்சியும் இருந்தது.

வெற்றி உறுதி
அண்ணன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்பதை ஈரோடு கிழக்குத் தொகுதி பரப்புரை பயணத்தில் உணர முடிந்தது. இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். வைகோவை ஈவிகேஎஸ் இளங்கோவன் அளவுக்கு யாருமே திட்டியிருக்க மாட்டார்கள், விமர்சனம் செய்திருக்க மாட்டார்கள். ஆனால் பழசையெல்லாம் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு காலத்திற்கேற்ப அரசியல் செய்யத் தொடங்கியுள்ளார் துரை வைகோ.












Click it and Unblock the Notifications