ஈரோடு.. பிரபல நிறுவனத்திற்கு சொந்தமான 5க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு
ஈரோடு: ஈரோட்டில் பிரபல கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான 5க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
Recommended Video

ஈரோடு மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு ஸ்ரீபதி அசோசியேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்படுகிறது. ஸ்ரீபதி பெயரில் ரியல் எஸ்டேட், பஸ் டிரான்ஸ்போர்ட், கட்டுமானம், திருமண மண்டபம், கரூரில் கல் குவாரி, மசாலா நிறுவனம், கட்டுமான பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகின்றனர்.

மேலும் அரசு துறை அலுவலகங்கள், மருத்துவ கல்லுாரிகள், பாலங்கள் உள்ளிட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் கட்டுமான பணிகளை ஒப்பந்தத்தின் அடிப்படையில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு தங்க பெருமாள் வீதியில் உள்ள ஸ்ரீபதி அசோசியேட் அலுவலகத்தில் 10க்கும் மேற்பட்ட காரில் வந்த கோவை, மதுரை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 35 பேர் வரி ஏய்ப்பு தொடர்பாக நேற்று நள்ளிரவு முதல் ரெய்டில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவர்களுக்கு சொந்தமான 5க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே சமயத்தில் ரெய்டு நடந்து வருகிறது. இதுவரை ரூ.16 கோடி கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications