எதிர்பாராமல் நடந்துவிட்டது.. ஸ்ட்ரெச்சர் இன்றி தாயை தூக்கி சென்ற மகள்! ஈரோடு சுகாதாரத்துறை விளக்கம்
ஈரோடு: ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ‛ஸ்ட்ரெச்சர்' வழங்கப்படவில்லை என்பதால் காலில் அடிபட்ட மூதாட்டியை அவரது மகளே தூக்கி சென்ற வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மருத்துவமனை சூப்பிரண்டு, ஆர்எம்ஓவிடம் ‛மெமோ' அனுப்பி விளக்கம் பெறப்பட்டுள்ள நிலையில் அது எதிர்பாராமல் நடந்த நிகழ்வு என்று சுகாதாரத்துறை இணை இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் சொர்ணா. இவர் நேற்று வேலை நிமித்தமாக சாலையில் நடந்து சென்றார். இந்த வேளையில் அவர் மீது இருசக்கர வாகனம் மோதியது. சொர்ணா காலில் படுகாயமடைந்தார்.

இதுபற்றி சொர்ணாவின் மகள் வளர்மதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வளர்மதி சம்பவ இடத்துக்கு சென்ற தாய் சொர்ணாவை ஆட்டோவில் மீட்டு ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.
ஈரோடு மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆட்டோ நின்றது. சொர்ணாவின் காலில் அடிபட்டதால் அவரால் நடக்க முடியவில்லை. இதனால் மகள் வளர்மதி ‛ஸ்ட்ரெச்சர்’ கேட்டார். ஆனால், அவருக்கு ஸ்ட்ரெச்சர் வழங்கப்படவில்லை. அதோடு ‛ஸ்ட்ரெச்சருக்காக வளர்மதி அலைக்கழிக்கப்பட்டார்.
இதற்கிடையே சொர்ணா வலியால் துடிதுடித்துள்ளார். இதையடுத்த வளர்மதி வேறு வழியின்றி தனது தாயை தூக்கி கொண்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே தான் காலில் அடிப்பட்ட சொர்ணாவை மகள் வளர்மதி தூக்கி சென்றதை அங்கிருந்தவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் கூட இல்லையா?, மக்களின் உயிரோடு மருத்துவமனை நிர்வாகம் விளையாடுகிறதா? என கடுமையான கேள்விகள் எழுப்பி விமர்சனம் செய்தனர்.
சம்பவம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டது. மருத்துவமனை சூப்பிரண்டு மற்றும் ஆர்எம்ஓக்கு மெமோ அனுப்பி விளக்கம் கோரப்பட்டது. இருவரும் விளக்கம் அளித்துள்ளனர். இந்நிலையில் தான் அவர்கள் அளித்த விளக்கம் தொடர்பாக முதற்கட்ட விசாரணை அறிக்கை ஈரோடு மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பாக சுகாதார இணை இயக்குனர் அம்பிகா சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்.
இதுபற்றி அவர், ‛‛கொலை செய்யப்பட்டு உயிரிழந்தவரின் உறவினர்கள் மருத்துவமனையில் கூட்டமாக இருந்த சூழலில் எதிர்பாராமல் இந்த நிகழ்வு நடந்துள்ளது. சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க மருத்துவமனை சூப்பிரண்டு, ஆர்எம்ஓவிடம் விளக்கம் கோரப்பட்டது. அவர்கள் அளித்த விளக்கத்தின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் பணியில் இருந்த டாக்டர்கள், பணியாளர்களிடம் விசாரிக்கப்பட உள்ளது’’ என்றார்.












Click it and Unblock the Notifications