“அதிமுக சீட் கொடுத்தால் செங்கோட்டையனை 60000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன்” - கே.கே.செல்வம்
ஈரோடு: கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிட அதிமுக சீட் வழங்கினால் செங்கோட்டையனை எதிர்த்து போட்டியிட்டு 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன் என செங்கோட்டையன் அண்ணன் மகன் கே.கே.செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், செங்கோட்டையன் தவெகவில் தாத்தா கதாபாத்திரத்தில் நடிக்கச் சென்றுள்ளார் என கே.கே.செல்வம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தவெகவில் இணைந்து அக்கட்சியில் உயர் மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி மற்றும் நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கான அமைப்புச் செயலாளர் பதவிகளைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில், செங்கோட்டையனின் அண்ணன் மகன் கே.கே.செல்வம் திமுகவில் இருந்து விலகி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சமீபத்தில் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். செங்கோட்டையனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கே.கே. செல்வம் அதிமுகவில் இருந்து விலகி 2020 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார்.
அங்கு அவருக்கு ஈரோடு வடக்கு மாவட்டச் சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால், அண்மையில் அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்தச் சூழலில் தான் அவர் மீண்டும் அதிமுகவில் இணைந்திருக்கிறார். கே.கே.செல்வத்துடன் அவரது ஆதரவாளர்களும் அதிமுகவில் இணைந்தனர். கே.கே. செல்வம் அதிமுகவில் இணைந்த நிலையில் இன்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அதிமுக அலுவலகத்தில் விருப்ப மனு வழங்கியுள்ளார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பேசிய கே.கே.செல்வம், "கோபிசெட்டிபாளையத்தில் போட்டியிட வாய்ப்பு கேட்கிறேன். 1980ல் தனது தாத்தா திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் போது காங்கிரஸ் சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட செங்கோட்டையன் வெற்றி பெற்றார். இந்நிலையில் தற்போது அதே கோபி தொகுதியில் செங்கோட்டையன் மீண்டும் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன். 60 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அவரைத் தோற்கடிப்பேன்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சினிமா படப்பிடிப்பாக ஈரோடு கூட்டம் நடைபெற்றது. இதில் ஹீரோ கேரக்டரில் விஜய்யும், தாத்தா கேரக்டரில் செங்கோட்டையனும் நடிக்கின்றனர். இந்த படப்பிடிப்பு தேர்தல் வாக்கு எண்ணிக்கை அன்று முடிவுக்கு வரும். ஈரோட்டில் தவெகவிற்கு கூடியது ரசிகர்கள், ரசிகைகள் கூட்டம் தான். கவுன்சிலர் தேர்தலில் கூட போட்டியிடாத விஜய், தவெகவினர் ஈரோட்டை தவெகவின் கோட்டையாக மாற்றுவோம் என கூறுவது வேடிக்கையாகவும், நகைப்பாகவும் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications