அண்ணாமலை என்ன செய்றார்னு பார்ப்பதுதான் எங்க வேலையா?.. சூடாக பதில் சொன்ன அமைச்சர் முத்துசாமி!
ஈரோடு: அண்ணாமலை இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து திமுகவினரின் சொத்து பட்டியலை அளிக்க உள்ள நிலையில், அது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் முத்துசாமி சூடாகப் பதில் அளித்துள்ளார்.
ஈரோடு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் வளர்ச்சிப் பணிகள் குறித்து வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துச்சாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோயாளிகளுக்கு செய்யப்பட்டுள்ள சிகிச்சை வசதிகள் குறித்தும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முத்துச்சாமி, அத்திக்கடவு அவிநாசி திட்டம் விரைவில் முடிக்கப்படும், பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் சோதனை பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் முதல்வர் ஸ்டாலினிடம் பேசி ஒரு வாரத்திற்குள் தொடக்க விழா தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று ஆளுநரை சந்தித்து திமுகவினரின் சொத்து பட்டியலை வழங்குவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் முத்துசாமி, "அண்ணாமலை அவரது வேலையை செய்கிறார். நாங்கள் எங்களது வேலையை செய்கிறோம். அவர் செய்யும் வேலை எல்லாம் நாங்கள் பார்த்துக்கொண்டு இருந்தால் எங்களது வேலை கெட்டுவிடும்" என்றார்.

மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்காகத்தான் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் முத்துசாமி, "மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கும், மதுபானங்கள் விலை ஏற்றத்திற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை, எல்லா மதுபானங்களின் விலையும் உயர்த்தப்படவில்லை" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications