டெல்லி செல்வதற்கு முன்.. பின்.. ஒரே பாலில் எடப்பாடி & அண்ணாமலையை க்ளீன் போல்டாக்கிய அமைச்சர் உதயநிதி
ஈரோடு : அதிமுகவில் ஐபிஎல் போட்டிகளையே நடத்தும் அளவுக்கு பல அணிகள் உள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மேலும், "நாங்கள் மக்கள் பிரச்சனைக்காக டெல்லிக்குச் செல்வோம்.. அதிமுக கோஷ்டி கட்சி பஞ்சாயத்தை தீர்க்க டெல்லி செல்கிறது" என்றும் சாடியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். இதனையடுத்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

டெல்லி பயணம் : ஈரோட்டில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், "திமுக எப்போதும் மக்களுக்கான கட்சி. நான் அமைச்சராக பொறுப்பு ஏற்றதும், பிரதமர் மோடியை டெல்லியில் சென்று பார்த்தேன். அப்போது 30 நிமிடங்கள் அவரிடம் பேசியபோது, அவரிடம் நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்தேன்.
முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி சென்று 260 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை திறப்பதற்காக ஜனாதிபதியை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வந்துள்ளார். ஆனால், இன்னொரு கட்சியை சேர்ந்த கோஷ்டி, அதாவது எடப்பாடி பழனிசாமி கோஷ்டி கட்சி பஞ்சாயத்தை சரிசெய்ய பிரதமரை சென்று சந்தித்து பேசியுள்ளனர்.

எடப்பாடி - அண்ணாமலை : எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதற்கு முன்பு என்ன பேசினார் என்றும், டெல்லி சென்று வந்த பின்பு என்ன பேசினார் என்று அனைவருக்கும் தெரியும். பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் எனக் கூறினார். ஆனால் டெல்லியில் நடந்த சந்திப்புக்குப் பின் இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டார்கள்.
கிரிக்கெட்டில் பல அணிகளை வைத்து ஐபிஎல் போட்டிகளை நடத்துவதுபோல அதிமுகவில் ஐபிஎல் நடத்தும் அளவுக்கு பல அணிகள் உள்ளன. ஈ.பி.எஸ் அணி, ஓ.பி.எஸ் அணி, சசிகலா அணி, டி.டி.வி.தினகரன் அணி, தீபா அணி, அதில் டிரைவர் அணி, கணவர் அணி என்று பல அணிகள் உள்ளன.

இனி அடுத்த தேர்தலுக்கு : அதிமுக கடந்த தேர்தலுக்கு இங்கு வந்தார்கள். இனி அடுத்த தேர்தலுக்குத்தான் இங்கு வருவார்கள். ஆனால் திமுக தேர்தலுக்கு தேர்தல் மட்டும் வரும் இயக்கம் அல்ல. எப்போதும் மக்களுக்காக களத்தில் போராடும் இயக்கம். தமிழர்களின் நலன் காக்கும் இயக்கம். மிசாவை பார்த்த இயக்கம் இது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 80 சதவீத தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது." எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications