ஈரோடு கிழக்கு: 'முதலியார்' பெயர் வந்தது எப்படி தெரியுமா? பிரசாரத்தில் சீமான் 'செம்ம ' விளக்கம்!
ஈரோடு கிழக்கு தொகுதியில் முதலியார் வாக்குகளை குறிவைத்து பிரசாரம் செய்தார் சீமான்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் கணிசமாக உள்ள செங்குந்த முதலியார் வாக்குகளை மையமாக வைத்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பகிரங்கமாக பிரசாரம் செய்து வருகிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக அணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுகவின் தென்னரசு, நாம் தமிழர் கட்சியின் மேனகா, தேமுதிகவின் ஆனந்த் களத்தில் உள்ளனர். இத்தொகுதியில் வரும் 27-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் கொங்கு வேளாள கவுண்டர்கள், செங்குந்த முதலியார்கள் பெரும்பான்மையினராக உள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் இதனை உறுதிப்படுத்த புள்ளி விவரங்கள் என்ற அடிப்படையில் எதுவும் இல்லை. செங்குந்த முதலியார் வாக்குகளை குறிவைத்து அனைத்து அரசியல் கட்சிகளும் வியூகங்களையும் வகுத்து செயல்படுகின்றன. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரிப்பதாக செங்குந்த முதலியார் ஜாதி சங்கம் பகிரங்கமாக அறிவித்தது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்களில் நாம் தமிழர் கட்சியின் மேனகா மட்டுமே செங்குந்த முதலியார் ஜாதியை சேர்ந்தவர். பொதுவாக ஜாதி மதம் பார்க்காமல் வேட்பாளரை நிறுத்துவதாக சீமான் பிரசாரம் செய்வார். இம்முறை ஈரோடு கிழக்கு தொகுதியில் முதலியார் ஜாதி வாக்குகளை குறிவைத்தே பகிரங்கமாக சீமான் பிரசாரம் செய்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் சீமான் பேசியதாவது: முதலியார் யார் என்பது உங்களுக்கு தெரியுமா? மானத் தமிழ் மக்கள்தான் முதலியார்.. அந்த வரலாறு உங்களுக்கு தெரியுமா? சேர சோழ பாண்டிய மன்னர்கள் காலத்தில் பட்டாடை நெய்து கொடுத்தவர்கள் முதலியார் ஜாதியினர். அத்துடன் போர் என்றால் முதலில் செவ்வேள் ஏந்தி களத்துக்கு வந்தவர்கள். அதனால்தான் அவர்கள் முதலியார் என அழைக்கப்பட்டனர். இந்த வரலாறு தெரியுமா?

விஜயநகரப் பேரரசு காலத்தில் தங்களுக்கு பட்டாடை நெய்துதர சொன்னார்கள்.. ஆனால் முதலியார் ஜாதியினர் அதை செய்ய மறுத்தார்கள். அதனால்தான் குஜராத்தில் இருந்து செளராஷ்டிரா மக்களை கொண்டு வந்து குடியேற்றம் செய்தனர். தன்மானம் மிக்க தமிழர்கள் நாட்டில் ஜாதியை சொல்லி வாக்கு கேட்க முடியாது. அண்ணாவுக்குப் பின் (முதலியார் ஜாதி) நெடுஞ்செழியன் (முதலியார் ஜாதி) வசம் ஆட்சி போயிருந்தால் நாடு உருப்பட்டிருக்கும். லஞ்சம் ஊழல் இல்லாத ஒரு தலைவன் நெடுஞ்செழியன். இவ்வாறு சீமான் பேசினார்.












Click it and Unblock the Notifications