வீடுகளுக்கு வெளியே ‘குறியீடு’.. ஈரோடு கிழக்கில் புது ஃபார்முலா? பயங்கர ‘பிளான்’.. அதிகாரிகள் ஷாக்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடாவுக்காக ஒரு புது ஃபார்முலாவே உருவாக்கப்பட்டு இருக்கிறதாம்.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் பரவலாக வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், அரசியல் கட்சியினர், வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பட்ட வீட்டு முகப்பில் குறித்து வைப்பதாகவும், ஒவ்வொரு பகுதியிலும் மின்சாரத்தை துண்டித்து விட்டு, குறியீடுகளுக்கு ஏற்ப, பணப் பட்டுவாடாவில் விரைந்து ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் நிலையில், பணப் பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் விநியோகம் தீவிரமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை வாக்குகள் இருக்கின்றன என்ற எண்ணிக்கை குறித்து, வீடுகளின் முகப்பு சுவரில், குறியீடு இடப்பட்டிருப்பதாக எழுந்து வரும் புகார் குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளதாக் தகவல் வெளியாகியுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பாக கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பாக எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 பேர் வேட்பாளர்கள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திமுக, அதிமுக என அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஈரோடு கிழக்கில் குவிந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பணப் பட்டுவாடா
ஈரோடு கிழக்கு தொகுதியில், வாக்காளர்களை கவரும் வகையில் பணப் பட்டுவாடா, குக்கர், பட்டுப்புடவை, வெள்ளி கொலுசு உள்ளிட்ட பரிசுப் பொருட்களை திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சியினர் வழங்கி வருவதாக மாறி மாறி புகார் கூறி வருகின்றனர். மேலும், வாக்காளர்களை கொட்டகையில் அடைத்து வைத்து பணம் விநியோகம் செய்வது, சுற்றுலா அழைத்துச் செல்வது, பிரியாணி விருந்து வழங்குவது என பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பரிசுப் பொருட்கள்
இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், பரிசுப் பொருள், பணம் வழங்கும் நடவடிக்கையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வீடு வீடாக குக்கர் வழங்கப்பட்டு வருவதாகவும், எவர் சில்வர் குடங்கள், வேட்டி, சேலைகள், கவரில் வைத்து பணமும் வழங்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுதொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

கரன்ட் கட் - குறியீடு
தொகுதியில் பல்வேறு பகுதிகளிலும், ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை வாக்குகள் இருக்கின்றன என்ற எண்ணிக்கையை வீடுகளின் முகப்புச் சுவரில், குறியீடாக எழுதி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், அந்தந்த பகுதியில் இரவு நேரங்களில் மின் இணைப்பை துண்டித்துவிட்டு, ஒரு வாக்குக்கு இவ்வளவு என கணக்கிட்டு வீடு வீடாக சில நிமிடங்களில் பணம் வழங்கப்பட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

அதிமுக புகார்
இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் புகார் கொடுத்த அதிமுக சட்டப் பிரிவு நிர்வாகி இன்பதுரை, "வாக்காளர்களை சுதந்திரமாக இருக்க விடாமல், அவர்களது வறுமையை பயன்படுத்தி, விலை பேசுவதும், அடைத்து வைப்பதுமாக திமுகவினர் அராஜகம் செய்கின்றனர். காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிக்க கோரி பரிசுப் பொருளாக வீடு தோறும் குக்கர் வழங்கியுள்ளனர். இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளோம். பறக்கும் படையும் இதை கண்காணிப்பது இல்லை. தேர்தல் பார்வையாளர்களும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.

புது ஃபார்முலா
இந்த குற்றச்சாட்டுகள் குறித்தும், வீடுகளில் எத்தனை வாக்கு இருக்கிறது என்பதை குறியீடாக வீடுகளின் சுவரில் குறியிடப்பட்டிருப்பதாகவும், அதற்கேற்ப இரவு நேரங்களில் பணப் பட்டுவாடா நடைபெறுவதாக எழுந்து வரும் குற்றச்சாட்டுகள் குறித்தும் தேர்தல் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஆக மொத்தம், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடாவுக்காக ஒரு புது ஃபார்முலாவே உருவாக்கப்பட்டுவிட்டது போலும்.












Click it and Unblock the Notifications