காதல் திருமணம் செய்த ஜோடி! கோயில் திருவிழாவிற்கு போனபோது இப்படியா நடக்கனும்.. ஈரோட்டில் பெரும் சோகம்
ஈரோடு: ஈரோடு சத்தியமங்கலம் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட புது மணத் தம்பதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவிழாவுக்காக மனைவியின் பெற்றோர் வீட்டிற்கு சென்ற நிலையில் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்ட தகராறு ஏற்பட்டதாகவும், இதில் அவர்கள் தற்கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள புதுக்கொத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வன். இவரது மகன் சந்திரன் (வயது 23). கட்டிட தொழிலாளியான சந்திரனுக்கு பக்கத்து ஊரானா இண்டியம்பாளையாம் சின்னகரடு பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி (19) என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது.

காதல் திருமணம்
இதையடுத்து ஒருவருக்கு ஒருவர் பேசி பழகினர். நாளடைவில் இது காதலாக மாறியது. இதையடுத்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சந்திரனும் பிரியதர்ஷினியும் காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு தம்பதியினர் புதுக்கொத்துக்காடு பகுதியில் வசித்து வந்தனர். காதல் திருமணம் செய்து கொண்டிருந்தாலும் கூட இவர்களுக்குள் அவ்வப்போது சின்ன சின்ன சண்டைகள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன் தினம் பிரியதர்ஷினியின் பெற்றோர் வீட்டில் திருவிழா நடந்துள்ளது. இதற்காக பிரியதர்ஷினியும் சந்திரனும் திருவிழாவுக்காக சின்னக்கரடு பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது திருவிழா பார்க்க சென்ற இடத்தில் கணவன் மனைவி இருவரும் பேசிக்கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டு விட்டு வீட்டுக்கு புறப்பட்டனர்.
அங்கு தூங்குவதாக சென்ற தம்பதியினருக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு இருக்கிறது. இதில் பிரியதர்ஷினி கோபித்துக்கொண்டு வீட்டுக்கு சென்றதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவரை பின் தொடர்ந்து சந்திரனும் பின்னால் சென்றார். ஆனால் விடிந்த பிறகும் அவர்கள் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அவர்கள் எங்கு சென்றார்கள் என்று குடும்பத்தினர் தேடிக்கொண்டிருந்துள்ளனர்.
கிணற்றில் குதித்துவிடுவதாக
இந்த நிலையில் ஊருக்கு வெளியே உள்ள ஒரு கிணற்றில் தம்பதி இருவரும் பிணமாக மிதந்துக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ளவர்கள், குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
இதில், திருவிழா பார்க்க வந்தபோது தம்பதி இருவரும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டு இருந்ததாகவும், பின்னர் திருவிழா பார்க்காமலேயே இருவரும் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது வீட்டில் வைத்தும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், பிரியதர்ஷினி கிணற்றில் குதித்து தற்கொலை செய்யப்போவதாக கூறி வீட்டை விட்டு சென்றாராம். அப்போது பயந்துபோன சந்திரன் அவரை பின் தொடர்ந்து சென்றதாகவும் தெரியவந்தது.
காரணம் என்ன?
இதனால் பிரியதர்ஷினி கிணற்றில் குதித்து இருக்கலாம் என்றும் அப்போது அவரை காப்பாற்ற நினைத்து சந்திரனும் கிணற்றில் குதித்து இருக்கக்கூடும் என்றும் இருவருக்கும் நீச்சல் தெரியாததால் கிணற்றில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையில் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்தனரா? அல்லது கொலையா என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். திருமணம் ஆன 7 மாதத்தில் புதுமண தம்பதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை தீர்வு அல்ல
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண் e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.












Click it and Unblock the Notifications