மாமியார் -மருமகள் உணவு ஊட்டிவிட்டால் பில் கட்டத் தேவையில்லை! பிரபல ஹோட்டலின் மகளிர் தின ஸ்பெஷல்!
ஈரோடு: மாமியார் மருமகள் ஒருவருக்கொருவர் உணவு ஊட்டி விட்டுக் கொண்டால் பில் கட்டத் தேவையில்லை என ஈரோட்டில் உள்ள பிரபல உணவகம் ஒன்று அறிவித்துள்ளது.
மாமியார் உடைத்தால் மண்குடம்; மருமகள் உடைத்தால் பொன்குடம் என்ற சொல்லாடலை பலரும் கேள்விப்பட்டிருப்போம். அதேபோல் பெண் வீட்டாரிடம் ''நாங்கள் அப்படி வைத்துக் கொள்வோம், இப்படி வைத்துக் கொள்வோம்'' என்று இனிக்க இனிக்க பேசி மகனுக்கு மணம் முடித்து வந்த பிறகு பல இடங்களில் மாமியார்கள் தங்கள் சுயரூபங்களை காட்டும் நிகழ்வு குறித்தும் அறிந்திருப்போம். இன்னும் பல வீடுகளில் அம்மா, மனைவிக்கு இடையே நடக்கும் பனிப்போரில் நைஸாக நழுவும் கணவர்கள் குறித்தும் கேள்வி பட்டிருப்போம்.

இப்படி மாமியார் மருமகள் உறவு என்பது நாளுக்கு நாள் நலிவடைந்து வரும் சூழலில், மீண்டும் பழையப்படி மாமியார் மருமகள் உறவை வலிமைப்படுத்தி ஒற்றுமையை மேம்படுத்தி குடும்பத்தில் மகிழ்ச்சியை தழைக்கச் செய்யும் வகையில் ஈரோட்டில் உள்ள உணவகம் ஒன்று அசத்தலான போட்டி ஒன்றை நடத்தி வருகிறது. ஈரோடு வேதா ரெஸ்டாரண்ட் அண்ட் கேட்டரிங் என்ற அந்த உணவகமானது, மார்ச் 6ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை தங்கள் உணவகத்திற்கு வரும் மாமியாரும், மருமகளும் ஒருவருக்கு ஒருவர் உணவை ஊட்டி விட்டுகொண்டால் உணவுக்கான கட்டணமே கட்டத் தேவையில்லை என அறிவித்துள்ளது.
ஐஸ்கிரீன், சூப், என எது வேண்டுமானாலும் கேட்டு வாங்கி சாப்பிடலாம் ஆனால் என்ன ஒரு நிபந்தனை என்றால், மாமியாரும், மருமகளும் அவரவர் கையால் சாப்பிடாமல் ஒருவருக்கு ஒருவர் ஊட்டிவிட வேண்டும் என்பதே. இது குறித்து கூறும் வேதா ரெஸ்டாரண்ட் உணவகத்தின் உரிமையாளர் பிரபு, தொடர்ந்து 6ஆவது ஆண்டாக இந்தப் போட்டியை நடத்தி வருவதாகவும், மகளிர் தினத்தை ஒட்டியும், குடும்ப ஒற்றுமையை மேம்படுத்த வேண்டியும் இந்தப் போட்டி தாங்கள் நடத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மருமகளுக்கு தனது கையால் உணவு ஊட்டி விட்டது புதிய அனுபவமாக இருந்தது என்றும் இவ்வாறு உணவு ஊட்டி விடும் போது பழைய மனக்கசப்புகள் எல்லாம் மறந்து போய்விடுவதாகவும் கூறுகிறார் பள்ளிபாளையத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர்.












Click it and Unblock the Notifications