திமுக VS நாம் தமிழர்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்புமனுத்தாக்கல் நிறைவு.. எத்தனை பேர் போட்டி?
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளான இன்று திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி உள்ளிட்டவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். மொத்தம் 23 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெற உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இருந்தார். அவர் காலமான நிலையில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 8 ம் தேதி ஓட்டு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் என்பது கடந்த 10ம் தேதி தொடங்கியது.
இன்றுடன் வேட்பு மனுத்தாக்கல் என்பது முடிவடைந்தது. கடைசி நாளான இன்று திமுக வேட்பாளர் சந்திரகுமார், சீமானின் நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி ஆகியோர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். மொத்தம் 23 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நாளை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். நாளை மறுநாள் (ஜனவரி 20) ம் தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும். அதைத்தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பொறுத்தமட்டில் அதிமுக, பாஜக கூட்டணிகள் புறக்கணித்துள்ளன. இதனால் நேரடி போட்டி என்பது திமுக VS நாம் தமிழர் என்று தான் உள்ளது.
கடந்த முறை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பொதுமக்களை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அழைத்து சென்று பணம், உணவு கொடுத்து மாலையில் தான் விடுவித்ததாகவும், அதேபோல் இந்த முறையும் ஆளும் கட்சியான திமுக அதனை செய்யும். தேர்தல் நேர்மையாக நடக்காது என்று கூறி எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக உள்பட அதன் கூட்டணி கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன.
இப்போது தேர்தல் நடக்கும் இந்த ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். அவர் மொத்தம் 67,300 வாக்குகள் பெற்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி யுவராஜை (பெற்ற வாக்குகள் 58,396) 8,904 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
அதன்பிறகு திருமகன் ஈவெரா காலமானார். இதையடுத்து 2023ல் நடந்த இடைத்தேர்தலில் திருமகன் ஈவெராவுக்கு பதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கிய ஈவிகேஎஸ் இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 156 ஓட்டுகள் பெறெ்று 66 ஆயிரத்து 233 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஈவிகேஎஸ் இளங்கோவனை எதிர்த்து போட்டியிட் அதிமுகவின் தென்னரசு 43,923 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார். தற்போது ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமாகி உள்ள நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு பதில் திமுக களமிறங்கி சந்திரகுமாரை வேட்பாளராக அறிவித்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications