ஈரோட்டில் அநியாயமாக வாழ்க்கையை தொலைக்கும் இளைஞர்கள்.. 2 கே கிட்ஸ்கள் அறிய வேண்டிய பாடம்
ஈரோடு: சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் தீபாவளி பண்டிகையின் போது இளைஞர்கள் தனது இருசக்கர வாகனத்தின் முன்பக்கம் பட்டாசுகளை பொருத்தி வெடிக்க வைத்துக்கொண்டு சாலையில் வீலிங் செய்து சாகசத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் மூன்று விலை உயர்ந்த இரண்டு சக்கர வாகனங்களை பெருந்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் வைத்து பட்டாசு வெடித்த வழக்கில் ஆகாஷ், சஞ்சய், பிரவீன்,கவின் ஆகிய 4 இளைஞர்கள் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பாய்ந்துள்ளது.
சாகசமும், இன்ஸ்டாவில் ரீல்ஸ் போடுவதுதான் வாழ்க்கை என்று நினைத்து வாழ்க்கையை தொலைப்பது அதிகரித்துள்ளது. இளைஞர்கள் தனது உயர் ரக இருசக்கர வாகனங்களை வாங்கிக் கொண்டு வீலிங் செயல்களில் ஈடுபட்டு தங்களது ஹீரோயிசத்தை வெளிப்படுத்துவதாக நினைத்து இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளங்களில் பைக் வீலிங் காட்சிகளை அண்மை காலங்களில் அதிக அளவில் பதிவிட்டு வருகின்றனர்.

அப்படித்தான் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர் ஒருவர் தீபாவளி பண்டிகையின் போது தனது நண்பர்களுடன் இணைந்து உயர் ரக இரு சக்கர வாகனத்தின் முன்பக்கம் பட்டாசுகளை பொருத்தி சாலையில் வீலிங் செய்தபடியே வெடிக்க வைத்து சென்ற சம்பவம் அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அச்சுறுத்தல் மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் அந்த இளைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த காட்சிகளை பதிவிட்டதால்,இந்த காட்சி ஆனது சமூக வலைதளங்களில் பரவி பார்ப்போர் மனதை பதைபதைக்க செய்தது. இந்த சாகச வீடியோ காட்சிகளை இன்ஸ்டாகிரம், முகநூல் போன்ற சமூக வலைத்தளத்தில் பதிவிடும் போது அடையாளம் தெரியாமல் இருக்க தலைக்கவசம் அணிந்து கொண்டும் வாகனங்களில் உள்ள நம்பர் பிளேட்டுகளை மறைத்த படியும் தங்களது சாகசங்களை செய்து பதிவேற்றம் செய்திருந்தார்கள்.
இதுபோன்று சாகச செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் விலை உயர்ந்த இரண்டு சக்கர வாகனத்தில் வீலிங் செய்து கொண்டே வாகனத்தின் முன்பக்கத்தில் பட்டாசுகளை பொருத்தி வெடிக்க செய்து இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஆகாஷ், சஞ்சய், பிரவீன்,கவின் ஆகிய 4 இளைஞர்களை இன்ஸ்டாகிராம் ஐடியை வைத்து பெருந்துறை காவல்துறையினர் பிடித்தனர்.
அவர்கள் நான்கு பேர் மீதும் நான்கு பிரிவுகளின் கீழ் பெருந்துறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனர். அத்துடன் இது தவறான செயல் என்பதை உணர்ந்தும் பைக் ரேசிங்கில் ஈடுபட்ட இளைஞர்களை விழிப்புணர்வு ஏற்படுத்தவும் செய்தனர். இளைஞர்கள் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோவும் வெளியிட்டுள்ளனர். எனவே ரீல்ஸ் மோகத்தில் சாகசத்தில் யாரும் ஈடுபட வேண்டாம்.. அது அவர்களை மட்டுமல்ல, அந்த சாலையில் செல்பவர்களையும் மோசமாக பாதிக்கும்.












Click it and Unblock the Notifications