ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் உள்ள.. வட இந்தியர்களை திருப்பி அனுப்புவேன்.. நாம் தமிழர் சீமான் ஆவேசம்
ஈரோடு: வடமாநிலத்தவர் வாக்கு அளித்ததாலேயே வானதி சீனிவாசன் வென்றதாகக் கூறிய சீமான், நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் வட மாநிலத்தவரைத் தமிழகத்தில் இருந்து வெளியேற்றுவேன் என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக அனைத்து தொகுதிகளுக்கும் லோக்சபா தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவுக்கு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.

இந்த லோக்சபா தேர்தலில் வழக்கம் போல நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ள சீமான் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
சீமான்: அதன்படி,ஈரோடு லோக்சபா தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கார்மேகன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த சீமான், பாஜகவைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அங்கே சீமான் பேசுகையில், "தமிழ் மக்களிடையே அநீதி, லஞ்சம், ஊழல், இயற்கை சுரண்டல் ஆகியவற்றை சகித்துக் கொண்டதால் இங்கே அடிமை இனம் உருவாகி வருகிறது.
இங்கே மக்கள் வாக்குக்குப் பணம் வாங்குவது எப்போது நிற்கிறதோ அப்போது தான் நல்ல சமூகம் உருவாகும். நாங்கள் வாக்கிற்காகத் தெரு தெருவாகச் சென்று பேசி வாக்கு சேகரித்து வருகிறோம். ஆனால், இங்கே வேறு எதாவது கட்சி இப்படி வந்து வாக்கு சேகரிக்கிறார்களா.. அவர்கள் தேர்தலுக்கு 2 நாள் முன்பு வீடு வீடாகச் சென்று கோழி பிடிப்பது போல வாக்குக்காக பணம் தருவார்கள். அந்த நிலை மாறினால் தான் தமிழக மக்கள் நிலை மாறும்.
வட மாநிலத்தவர்: தமிழ்நாட்டில் நடக்கும் குற்றங்களில் 90 சதவிகிதம் மது போதையில் தான் நடக்கிறது. நாம் தமிழ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மதுக் கடைகளையும் மூடிவிடுவேன். தமிழக இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.. தமிழர்களின் நிலம் பறிபோய் வருகிறது. தமிழகத்தில் மற்ற மாநிலத்தவர் வந்து குடியேறி வருகிறார்கள். அவர்கள் வந்து வேலை செய்வது தவறு எனச் சொல்லவில்லை.
வெளியேற்றப்படுவார்கள்: ஆனால், இங்கேயே குடும்ப அட்டை வாங்கி நிரந்தரமாகத் தங்குவதை எதிர்க்கிறோம். கோவையை எடுத்துக் கொள்ளுங்கள்.. அங்கே வட மாநிலத்தவர் அளித்த வாக்கு காரணமாகவே பாஜகவின் வானதி சீனிவாசன் பெற்றி பெற்றார். நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் அப்படி தமிழகத்தில் நிரந்தரமாக இருக்கும் வட இந்தியர்களை தமிழகத்தில் இருந்து அனுப்பிவிடுவேன். வட இந்தியர்களுக்கு குடும்ப அட்டை கொடுத்தால் தமிழகம் சீக்கிரமே இந்தி பேசும் மாநிலமாக மாறும் அபாயம் இருக்கிறது.
போதை மருந்து விவகாரம்: இங்கே போதை மருந்து கடத்தியதாக ஏ ன் ஜாபர் சாதிக்கை விசாரிக்கிறார்கள். ரொம்பவே நல்ல விஷயம்.. ஆனால், அதானி துறைமுகத்தில் 1. 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பிடிபட்டதே.. அது என்ன ஆனது. அந்த போதைப் பொருள் எங்கே இருக்கிறது. கடலில் கொட்டி விட்டார்களா..
அது தொடர்பாக யாரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த கேள்விகளுக்குப் பதில் இல்லை. ஜாபர் சாதிக் சிறுபான்மையினராக இருப்பதால் நடவடிக்கை எடுக்கிறார்கள். மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்" என்று அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications