உங்களுக்கு தெரியாது.. நாம் தமிழர் கட்சியில் இணைய என்னை சந்தித்தார் திருமகன் ஈவெரா.. சீமான் தகவல்
நாம் தமிழர் கட்சியில் இணைய என்னை திருமகன் ஈவெரா சந்தித்தார் என கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தகவல்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா நாம் தமிழர் கட்சியில் இணைய என்னை சந்தித்தார் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் சார்பில் மேனகா நவவீதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் ஆடை வடிவமைப்பு துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.
தனியார் மருத்துவ நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக மேனகா பணியாற்றி வருகிறார். இவருடைய அறிமுகக் கூட்டம் நேற்றைய தினம் ஈரோடு மரப்பாலத்தில் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.
12 நாட்கள் தங்குகிறேன்.. தெருத் தெருவாக மக்களை சந்திக்கப் போகிறேன்.. ஈரோட்டில் சீமான் அறிவிப்பு!
தேர்தல் தேதி
அவர் பேசுகையில் தேர்தல் தேதி அறிவித்த உடனே எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு கேட்டனர். எந்த அரசியல் கட்சிகளிடமும் ஆதரவு கேட்காத ஒரே கட்சி நாம் தமிழர்தான். நாங்கள் மக்களின் ஆதரவை நம்பி களத்தில் நிற்கிறோம். அப்படி பார்த்தால் நாம் வைத்திருப்பதுதான் பெரிய கூட்டணி.
இந்தியா
இந்தியா இப்போது விற்பனைக்கு காசு இருக்கிறவங்க வாங்கலாம் என்ற நிலை வரும். தமிழகத்தில் வடஇந்தியர்கள் பரவல் அதிகமாகிவிட்டது. இதற்காகவாது என் தங்கை மேனகாவுக்கு வாக்கு செலுத்துங்கள். ஓட்டு போட்டால் வடக்கில் இருந்து வரும் ரயில்கள் எல்லாம் தென்னிந்தியாவிலிருந்து வட இந்தியாவுக்கு போகும்.
நாம் தமிழர் கட்சி
இத்தனை வருஷமா நாம் தமிழர் கட்சி வோட்டு கேட்கிறார்களே ஒரு முறையாவது போடுவோம் என மக்கள் நினைப்பது போல் நடந்து கொள்ள வேண்டும். அதற்கான களப்பணியை ஆற்ற வேண்டும். காசு ஏன் வாங்குறீங்கன்னு பெரியம்மா, சின்னம்மா கிட்ட கேட்டேன். அதற்கு அவர்கள் சொன்னார்கள், ஏம்ப்பா அது எங்க காசுதானே, இவங்க யார் வந்தாலும் எதையும் செய்ய போறதில்லை.
ஓட்டுக்கு பணம்
அதனால் இந்த காசாவது கிடைக்கட்டுமே என்பார்கள். அவர்கள் சொல்வதும் சரிதான். காசை வாங்கிக் கொள்ளுங்கள் ஆனால் ஓட்டை நாம் தமிழருக்கு போடுங்கள். இதுவரை எந்த அதிகார பதவிகளிலும் இல்லாத எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் பின்னர் உங்கள் தொகுதி எப்படி இருக்கிறது என்பதை பாருங்கள். தம்பி திருமகனை எனக்கு மிகவும் பிடிக்கும்.
திருமகனை எனக்கு பிடிக்கும்
உங்களுக்கு தெரியா ஒரு விஷயத்தை நான் சொல்கிறேன். தம்பி திருமகன் ஈவெரா முதலில் நம் கட்சியில் இணைவதற்காக என்னை வந்து பார்த்தார். பின்னர் ஐயா (ஈவிகேஎஸ் இளங்கோவன்) என்ன சொன்னாரோ ஏது சொன்னாரோ நான் வரலை என சொன்னார், நானும் சரிப்பா நீ அங்கேயே இருந்து விடு என்றேன். அவர் இறந்ததில் எனக்கு மிகவும் துயரம். இந்த துயரத்தை ஐயாவிடமும் (ஈவிகேஎஸ்) பகிர்ந்து கொண்டேன்.
ஈவிகேஎஸ் என்ன செய்துவிடுவார்
ஒன்றரை ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதியாக இருந்த தம்பி திருமகன் இதுவரை மக்கள் பிரச்சினையை தீர்த்துள்ளாரா. அவரே தீர்க்க முடியாத போது அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் மட்டும் வந்து என்ன செய்துவிட முடியும். அவர் ஏற்கெனவே மத்திய அமைச்சராகலாம் இருந்தவர். அப்போதே ஒன்றும் செய்யாதவர். இப்போது ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மட்டும் என்ன செய்துவிட போகிறார். முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அப்போது பொங்கலுக்கு ரூ 2500 கொடுத்தார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், அது போதாது ரூ 5000 கொடுங்கள் என்றார். தற்போது எடப்பாடி பழனிசாமி பொங்கலுக்கு ரூ 5000 கொடுங்கள் என்கிறார். இப்படித்தான் இவர்கள் அரசியல் செய்கிறார்கள். இவ்வாறு பொதுக் கூட்டத்தில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.