“ஓட்டு போட போற பொண்ணே..” ஈரோட்டில் பாட்டு பாடி கலக்கும் சீமான்.. வேட்பாளர் முகத்தில் சிரிப்புதான்!
“உழைக்கும் மக்கள் சின்னம்.. அது விவசாயி சின்னம்..” என ஈரோடு தேர்தல் பிரச்சாரக் களத்தில் பாடி வருகிறார் சீமான்.
ஈரோடு : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நெருங்குவதையொட்டி, அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் சீமான், பாட்டுப் பாடி வாக்கு கேட்டு வருகிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா நவநீதன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பாடல்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட சீமான் பிரச்சாரத்தில் பாட்டுப் பாடி அசத்தி வருகிறார்.

மலையூர் மம்பட்டியான் படத்தில் இடம்பெற்ற 'காட்டுவழி போற பொண்ணே கலங்கி நிக்காத..'என்ற பாடலை "ஓட்டு போட போற பொண்ணே ஒதுங்கி நிக்காத.." என தேர்தல் களத்துக்கு ஏற்ப வரிகளை மாற்றிப் போட்டு பாடி வருகிறார் சீமான்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் சீமான், பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது, பாடலையும் பாடி வருகிறார். சீமான் பாட்டுப்பாடி ஓட்டு கேட்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் வெகுவாகப் பரவி வருகின்றன.

சீமான் பாடிய பாடல்:
"ஓட்டு போட போற பொண்ணே ஒதுங்கி நிக்காத..
கண்ட கண்ட சின்னங்கண்டு கலங்கி நிக்காத..
உழைக்கும் மக்கள் சின்னம் அது விவசாயி சின்னம்..
ஓட்டுப்போட போற அம்மா
ஓட்டுப்போட போற அக்கா
ஓட்டுப்போட போற அப்பா
ஒதுங்கி நிக்காத..
கண்ட கண்ட சின்னங்கண்டு கலங்கி நிக்காத..
உழைக்கும் மக்கள் சின்னம்.. அது விவசாயி சின்னம்..
நாள்தோறும் பாடுபட்டோம்.. ஆனாலும் கஷ்டப்பட்டோம்
நாள்தோறும் பாடுபட்டோம்.. ஆனாலும் துன்பப்பட்டோம்
யார் யாருக்கோ ஓட்ட போட்டோம்
ஓட்டாண்டி ஆகிப்புட்டோம்
இந்த நெல மாற.. நான் வேற என்ன கூற..
ஏ இந்த நெல மாற நான் வேற என்ன கூற..
ஓட்டு போட போற பொண்ணே ஒதுங்கி நிக்காத..
கண்ட கண்ட சின்னங்கண்டு கலங்கி நிக்காத..
உழைக்கும் மக்கள் சின்னம்.. அது விவசாயி சின்னம்.. "
என்று பிரச்சாரத்தில் அமைதியாக பாடிய சீமான்,
"உழவு இல்லை என்றால் உணவு இல்லை! உணவு இல்லை என்றால் உயிர்கள் இல்லை! உயிர்கள் இல்லை என்றால் உலகம் இல்லை! உழவை மீட்போம்!! உலகைக் காப்போம்!! நமது சின்னம் விவசாயி" என்ற பஞ்ச் உடன் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.
சீமான் பாட்டு பாடத் தொடங்கியதுமே, மேடையில் இருக்கும் நாதக வேட்பாளர் மேனகா நவநீதன் சிரிப்போடு கைதட்டி ஆரவாரம் செய்தார். நாம் தமிழர் கட்சியின் தொண்டர்களும் சீமான் பாட்டுக்கு நல்ல வரவேற்பை அளித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications