சட்டென சீறிய செங்கோட்டையன்! "அப்போ மட்டும் தப்பில்லையா?" பழைய பிரஸ் மீட் வீடியோவை போட்டதால் பரபரப்பு
ஈரோடு: அதிமுகவில் இப்போது மீண்டும் உட்கட்சி குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். எடப்பாடி பழனிசாமி மீது அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது முன்பு ஓபிஎஸுக்கு எதிராக செங்கோட்டையன் பேசிய வீடியோ ஒன்றைச் செய்தியாளர் போட்டுக் காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுகவில் கடந்த சில ஆண்டுகளாக எந்தவொரு உட்கட்சி மோதலும் இல்லாமல் அமைதி நிலவியது. ஆனால், இப்போது மீண்டும் அங்கு உட்கட்சி குழப்பம் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே மோதல் வெடித்தது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கருத்துகளை செங்கோட்டையன் மெல்லக் கூற ஆரம்பித்திருந்தார்.

செங்கோட்டையன்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அனைவரையும் மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்றும் அப்போது தான் தேர்தலில் வெல்ல முடியும் என்றும் செங்கோட்டையன் கூறியிருந்தார். அதாவது சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோரைச் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். இது எடப்பாடிக்கு எதிரான கருத்தாகவே பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் தேவர் ஜெயந்தியின்போது அவர் டிடிவி மற்றும் ஓபிஎஸை நேரில் சந்தித்தார். இது கட்சியில் பெரும் பேசுபொருளானது. இதையடுத்து செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே செங்கோட்டையனின் ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இந்தச் சூழலில் தான் இன்று கோபியில் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது எடப்பாடி மீது அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கட்சியில் கருத்து சொல்வது ஜனநாயக உரிமை என்றும் தன்னை அழைத்து என்ன பிரச்சனை என ஒருமுறை கூட எடப்பாடி பழனிசாமி கேட்டதே இல்லை என கூறினார்.
செய்தியாளர் கேட்ட கேள்வி
அப்போது செய்தியாளர்களும் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். ஒரு கட்டத்தில் செய்தியாளர் ஒருவர், ஒபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டபோது அவர் அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்து, அதை உடைத்து நொறுக்குகிறார்.. அப்போது நீங்களே பிரஸ் மீட்டில் அவர் செய்தது தவறு எனச் சொன்னீர்கள்.. ஆனால் இப்போது சரி என்கிறீர்களே எனக் கேட்டார்.
இருப்பினும், அந்தச் சம்பவம் குறித்துப் பதிலளிக்க விருப்பமில்லை என செங்கோட்டையன் குறிப்பிட்டார். அப்போது செய்தியாளர் மீண்டும் அதே கேள்வியை எழுப்பவே, செங்கோட்டையன் டென்ஷன் ஆனார். அவர் மேலும், "என்னை முழுமையாகப் பதில் அளிக்க விடுங்கள். ஒவ்வொரு கேள்வியாகக் கேளுங்கள்.. உணர்ச்சிவசப்பட வேண்டாம். நான் என்றைக்காவது பொதுக்குழுவில் நடந்தது பற்றிப் பேசியிருக்கிறேனே" எனக் கேட்டார். அதற்கு அந்தச் செய்தியாளர் "ஆம்" என பதிலளித்தார்.
பழைய வீடியோ
உடனே செங்கோட்டையன், "நான் அன்றைய நிலையில் எந்தவொரு கருத்தையும் சொல்லவில்லை. நீங்களாகவே சொல்லக்கூடாது" என்றார். அப்போது அந்தச் செய்தியாளர் உடனே செங்கோட்டையனின் பழைய பிரஸ் மீட் வீடியோவை அங்கேயே போட்டுக் காட்டினார். அதில் ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்து அடித்து நொறுக்கியது போன்ற தவறுகளை யாரும் செய்யக்கூடாது எனக் கூறியிருந்தார்.
செங்கோட்டையன் டென்ஷன்
வீடியோவை போட்டதும் செங்கோட்டையன் கடுப்பாகிவிட்டார். உடனே அவர்"சரி அதை ஆஃப் செய்யுங்கள்.. 1975ல் அதிமுகவுக்காக ஒரு பை லா போடப்பட்டது. அதில் 43ஆவது பாராவில் எந்தக் காலகட்டத்திலும் தொண்டர்களால் தலைவர் தேர்ந்தெடுக்கும் விதியை மாற்றவே கூடாது என்பதை இந்தக் கட்சியை உருவாக்கிய எம்ஜிஆர் சொல்லியிருந்தார். ஆனால், அந்த விதியைச் சுக்குநூறாக உடைத்தனர்" எனச் சொல்லிச் சமாளித்தார். பழைய பிரஸ் மீட் வீடியோவை போட்டுக்காட்டியதால் செங்கோட்டையன் கடுப்பானதால் அங்குச் சலசலப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications