தவெக-வில் எனக்கு மரியாதை இல்லையா? எஸ்பி வேலுமணிக்கு நேரடியாக பதிலடி கொடுத்த செங்கோட்டையன்
ஈரோடு: தவெக-வில் மரியாதை இல்லை என்று சொல்பவர்கள், அதிமுக-வில் எங்களுக்கு என்ன மரியாதை கொடுத்தீர்கள் என்பது அனைவரும் அறிவார். அதை நான் உதாரணம் காட்டி விளக்க வேண்டிய அவசியமில்லை. துரோகத்தின் மொத்த உருவமாக இருப்பவர்கள் பேசுவதை பற்றி எனக்கு கவலை இல்லை என ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார்.
தவெகவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்ற கருத்துக்களும் எதிர்க்கட்சிகளிடம் இருந்து எழ ஆரம்பித்தன. கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்றவர்கள் அங்கு உரிய மரியாதை கிடைக்காததால் மீண்டும், அதிமுகவுக்கே திரும்பி வரத் தயாராக இருக்கின்றனர் என கூறியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கொளப்பலூர் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கலந்து கொண்டு கட்சி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக வெற்றி கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறுகையில், "வேலூரில் நடைபெற்ற தவெக-வின் நிகழ்ச்சி ஒரு புதிய வரலாற்றைப் படைத்துள்ளது. எங்கள் கட்சியின் தலைவர் தளபதி விஜய்யின் ஒவ்வொரு வார்த்தையையும் கேட்கும்போது, மக்கள் மத்தியில் பெரும் எழுச்சியும் ஆர்ப்பரிப்பும் ஏற்படுகிறது. இன்று தமிழக அரசியலில் நமக்கும் (தவெக) திமுகவிற்கும் இடையேதான் நேரடிப் போட்டி.
ஆளுங்கட்சியாக இருப்பவர்களை விமர்சிப்பதே முறையான அரசியல் என்பதால், எங்கள் இலக்கு திமுக மட்டுமே. தளபதியின் வாகனத்திற்குப் பின்னால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து வருகின்றன. அந்தப் பெருங்கூட்டத்தில் ஒருமுறை நானும் சிக்கிக் கொண்டேன். அந்த அளவிற்கு மக்கள் ஆதரவு பெருகியுள்ளது. 8 வயது சிறுவர்கள் முதல் 45 வயது பெரியவர்கள் வரை, அனைவரும் அவரது பெயரை உச்சரிப்பதோடு, அவருக்குப் போட்டியிட ஓட்டு போட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
தவெக-விற்குச் சென்றவர்கள் மீண்டும் அதிமுக-விற்குத் திரும்புவார்கள் என்ற எஸ்.பி. வேலுமணியின் கருத்திற்குப் பதிலளித்த அவர்: "தேர்தல் வரட்டும், வேட்பாளர்கள் அறிவிக்கப்படட்டும். அப்போது எத்தனை பேர் எங்களை நாடி வருகிறார்கள் என்பதை நீங்களே காண்பீர்கள். தவெக-வில் மரியாதை இல்லை என்று சொல்பவர்கள், அதிமுக-வில் எங்களுக்கு என்ன மரியாதை கொடுத்தீர்கள் என்பது அனைவரும் அறிவார், அதை நான் உதாரணம் காட்டி விளக்க வேண்டிய அவசியமில்லை. என்றார்.
சசிகலா குறித்துப் பேசிய செங்கோட்டையன், "சசிகலா அவர்கள் மிகத் தெளிவாகக் கூறிவிட்டார். தன்னை யாரெல்லாம் முதுகில் குத்தினார்கள், நெஞ்சில் குத்தினார்கள் என்பது அவருக்குத் தெரியும். அவரது கணவர் மறைந்தபோது, சிறைச்சாலையில் 15 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் வெறும் 5 நாட்கள் மட்டுமே அனுமதி கிடைக்க யார் காரணமாக இருந்தார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார். எனவே துரோகத்தின் மொத்த உருவமாக இருப்பவர்கள் பேசுவதைப் பற்றி எனக்கு கவலை இல்லை என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications