எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சராக வருவார்! செங்கோட்டையன் உறுதி!
எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சராவார் என செங்கோட்டையன் நம்பிக்கை.
ஈரோடு: 2026-ல் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்பார் என அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எங்களுக்கும் காலம் வரும்; காலம் வந்தால் வாழ்வு வரும்; வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே என்ற பழைய சினிமா பாடல் ஒன்றை மேற்கொள் காட்டிய செங்கோட்டையன், ஈரோடு கிழக்கில் அதிமுக வெற்றிப்பெற போவது உறுதி எனக் கூறினார்.
இதனிடையே ஒரு காலத்தில் தனது சூப்பர் ஜூனியராக இருந்த எடப்பாடி பழனிசாமியை, இன்று நிரந்த முதலமைச்சர் என செங்கோட்டையன் கூறும் அளவுக்கு காலச்சக்கரம் சுழன்றிருப்பது கவனிக்கத்தக்கது.

அதிமுக
அதிமுகவை பொறுத்தவரை யாரும் எந்தப் பொறுப்புக்கும் வர முடியும் என்பது அக்கட்சியின் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் முத்துசாமி, செங்கோட்டையன் போன்றவர்களிடத்தில் அரசியல் பாலபாடம் பயின்ற எடப்பாடி பழனிசாமி இன்று தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக என்ற மிகப் பெரிய கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் என பல உயரங்களை எட்டிப்பிடித்திருக்கிறார்.

நிரந்த முதல்வர்
இந்நிலையில் அரசியலில் காலச்சக்கரம் எவ்வளவு வேகமாக சுழல்கிறது என்பதற்கு உதாரணம் தான் இன்று செங்கோடையன் கூறியுள்ள ஒரு கருத்தாகும். அதாவது எடப்பாடி பழனிசாமி நிரந்தர முதலமைச்சராக 2026ல் பதவியேற்பார் என செங்கோட்டையன் கூறியிருக்கிறார். தாம் என்னதான் எம்.ஜி.ஆர்.காலத்து சீனியர் என்றாலும் நடப்பு அரசியலுக்கு அது கைகொடுக்காது என்பதால் தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார் செங்கோட்டையன்.

40க்கு 40 வெற்றி
இதனிடையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்துவார் எனவும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அதிமுக மிகப் பெரிய வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்த செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியை எடப்பாடி பழனிசாமி என்று கூட கூறாமல் வார்த்தைக்கு வார்த்தை எடப்பாடியார் என்று மட்டுமே குறிப்பிட்டார்.

வாழ்வு வரும்
மேலும் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, எங்களுக்கும் காலம் வரும்; காலம் வந்தால் வாழ்வு வரும்; வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே என்ற பழைய சினிமா பாடல் ஒன்றை மேற்கொள் காட்டினார் செங்கோட்டையன்.












Click it and Unblock the Notifications