"புரிய வேண்டியவர்களுக்கு புரிய வேண்டும்!" 10 நாள் கெடு முடிந்த கையோடு செங்கோட்டையன் சொன்ன பாயிண்டு
ஈரோடு: அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையன் வலியுறுத்தியிருந்தார். இதற்காக அவர் விதித்த கெடு இன்றுடன் முடிந்த நிலையில், இன்று செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற அவர், அதிமுக ஒன்றிணையும் விவகாரத்தில் புரிய வேண்டியவர்களுக்குப் புரிய வேண்டும் என்றார்.
தமிழகத்தில் பிரதான கட்சிகளில் ஒன்றான அதிமுகவில் ஜெயலலிதா மறைவில் இருந்தே தொடர்ச்சியாக உட்கட்சி குழப்பங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டு வந்தது. பல கோஷ்டிகள் பிரிந்தன. இதனால் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கும் அளவுக்குக் கூட நிலைமை மோசமானது. அதன் பிறகு நிலைமை சீராக பல காலம் ஆனது.

அதிமுக அரசியல்
எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வானார். அவரை எதிர்த்தவர்கள் என்று கட்சியில் இருந்து வெளியேறினர்.. அல்லது வெளியேற்றப்பட்டனர். இதனால் அதிமுகவில் உட்கட்சி குழப்பம் முடிவுக்கு வந்தது. அதேநேரம் கடந்த 2019 லோக்சபா தேர்தல் தொடங்கி பல்வேறு தேர்தல்களிலும் அதிமுக தொடர் தோல்விகளை சந்ததித்து வந்தது. அதிமுக இப்படி பல கோஷ்டிகளாக பிரிந்து கிடப்பதே இதற்கு காரணம் என்றும் இதனால் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
கெடு விதித்த செங்கோட்டையன்
இந்தச் சூழலில் இம்மாத தொடக்கத்தில் அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். கோபியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல பிரிவுகளாக பிரிந்திருக்கும் அதிமுகவை ஒரே அணியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும் என்றும் அவர் சொன்னார். தன்னை மிக கடுமையாக விமர்சித்தவர்களை கூட அரவணைத்து அரசியல் செய்தவர் எம்ஜிஆர் என்றும் அதுபோல மறப்போம் மன்னிப்போம் என இருக்க வேண்டும் என்றும் செங்கோட்டையன் கூறினார்.
மேலும், அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணிகளை கட்சியின் பொதுச்செயலாளர் மேற்கொள்ள வேண்டும் என்று சொல்லி அதற்கு 10 நாட்கள் கெடுவும் விதித்தார். கட்சியை ஒருங்கிணைக்கும் பணிகளை செய்யவில்லை என்றால் அந்த பணிகளை தானே செய்வேன் என்றும் அவர் குறிப்பிட்டார். செங்கோட்டையனின் இந்த பேச்சு அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பரபரத்த அதிமுக
செங்கோட்டையன் இதுபோல பேசிய மறுநாளே அவரது கட்சி பதவிகளை பறித்தார் எடப்பாடி பழனிசாமி.! இது ஒரு பக்கம் இருக்க செங்கோட்டையனுக்கு ஆதரவாக 500+ நிர்வாகிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். மேலும், கோபியில் உள்ள செங்கோட்டையனின் இல்லத்திலும் அலுவலகத்திலும் பல ஆயிரம் தொண்டர்கள் செங்கோட்டையனை சந்தித்து ஆதரவும் கொடுத்தனர். அதேநேரம் எடப்பாடி பழனிசாமி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.
இதற்கிடையே செங்கோட்டையன் டெல்லிக்கு போய் பாஜக மூத்த தலைவரான அமித் ஷாவை எல்லாம் சந்தித்தார். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு அதிகரித்தது. அதன் பிறகு பெரிய மாற்றங்கள் நடக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அதுபோல எதுவும் நடக்கவில்லை. அந்த சந்திப்புக்கு பிறகு எல்லாம் அப்படியே பிசுபிசுத்து போய் விட்டது.
அடுத்து என்ன
இந்தச் சூழலில் தான் செங்கோட்டையன் விதித்த 10 நாள் கெடு இன்றுடன் நிறைவடைகிறது. எடப்பாடி பழனிசாமி இதுவரை கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களைச் சேர்க்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில், செங்கோட்டையன் தனது அடுத்தகட்ட நடவடிக்கையைத் தொடங்குவார் எனத் தெரிகிறது. இதற்கிடையே அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்திய செங்கோட்டையன், அங்குச் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
செங்கோட்டையன் கருத்து
அப்போது பேசிய அவர், "அதிமுகவை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்பதாலேயே மனம் திறந்து பேசினேன்.. இயக்கம் ஒன்றுபட வேண்டும் என்பதே எனது நோக்கம்.. தொண்டர்களும் பொதுமக்களுக்கும் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மக்கள் மனநிலை அதுவாகவே இருக்கிறது. அதிமுக ஒன்றிணையும் விவகாரத்தில் புரிய வேண்டியவர்களுக்குப் புரிய வேண்டும்" என்று மட்டும் பேசினார். அடுத்த கட்ட திட்டம் குறித்து செய்தியாளர்கள் பலரும் கேள்வி எழுப்பிய போதிலும், அது குறித்துப் பதிலளிக்காமல் செங்கோட்டையன் கிளம்பிவிட்டார்.












Click it and Unblock the Notifications