அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து... அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
ஈரோடு: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். தனியார் பள்ளிகள் விரும்பினால் ஆன்லைனில் நடத்திக் கொள்ளலாம் என்றும் கூறினார்.
Recommended Video

கொரோனா ஊரடங்கால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பாடங்கள் கற்பிப்பது மிக தாமதமாகவே ஆன்லைனில் தொடங்கியது. அதேநேரம் ஸ்மார்ட்போன் இல்லாத நிலையில் ஏராளமான மாணவர்கள் பாடங்களை படிப்பதற்கு சிரமப்பட்டு வருகிறார்கள்.
பெரும்பாலானோர் ஏழை மாணவர்கள் என்பதால் அவர்கள் பாடங்களை தொலைக்காட்சி சேனல்கள் வாயிலாக மட்டுமே கற்கும் நிலையில் உள்ளார்கள். ஆன்லைனில் கற்பது ஏழை மாணவர்களுக்கு சாத்தியம் இல்லாத ஒன்றாக உள்ளது.

அரையாண்டு தேர்வு
இந்த சூழலில் வழக்கமாக டிசம்பர் மாதத்தில் இந்த சமயத்தில் எல்லாம் அரையாண்டு தேர்வு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், ரத்து செய்யப்படுமா அல்லது நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. அப்படியே நடந்துவது என்றாலும் ஆன்லைனில் நடத்துவதும் சாத்தியமில்லாத நிலை இருந்தது.

தனியார் பள்ளிகள்
இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில் "அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுகிறது. தனியார் பள்ளிகள் விரும்பினால் ஆன்லைனில் அரையாண்டு தேர்வை நடத்திக் கொள்ளலாம்" என்று கூறினார்.

அமைச்சர் தகவல்
மேலும் அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில். 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை 50 சதவீத பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. 10,11, 12-ஆம் வகுப்புகளுக்கு 35 சதவீத பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டிருக்கிறது என்றார்.

தேர்வு நடக்கலாம்
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை என்றும் அதேசமயம் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியின் போது குறிப்பிட்டார். தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விருப்பம் என்று அமைச்சர் கூறியிருப்பதால் தேர்வுகள் தனியார் பள்ளிகளில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications