ஈரோடு பக்கம் எட்டிப்பார்க்காத காங்கிரஸ் தலைவர்கள்! சட்டை செய்யாத ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்!
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பிரச்சாரம் செய்ய வராத காங்கிரஸ் தலைவர்கள்.
ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதி பக்கம் காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் யாரும் எட்டிக்கூட பார்க்காதது அங்கு பணியாற்றும் அமைச்சர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பணம் காசு செலவழிக்காவிட்டாலும் பரவாயில்லை, ஒரு பேருக்காவது வந்து தலையை காட்டியிருக்கலாமே என காங்கிரஸ் தலைவர்கள் மீது திமுகவினர் ஆதங்கப்படுகின்றனர்.
இதனிடையே அமைச்சர்கள் எ.வ.வேலு, செந்தில்பாலாஜி, கே.என்.நேரு. முத்துசாமி, ஆகிய நான்கு பேரும் தன்னை எப்படியும் வெற்றிபெற வைத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் உள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன், தனக்காக பிரச்சாரத்துக்கு வராத காங்கிரஸ் புள்ளிகளை பற்றி கவலை கொள்ளவில்லை.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா அண்மையில் மாரடைப்பு காரணமாக காலமானார். இதையடுத்து ஈரோடு கிழக்குத் தொகுதி காலி என அறிவிக்கப்பட்டதுடன் இடைத்தேர்தல் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

அமைச்சர்கள் டீம்
ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றிபெற வைப்பதற்காக மொத்த அமைச்சர்களும் தங்கள் பணிகளை விட்டுவிட்டு ஈரோட்டில் முகாமிட்டு தேர்தல் பணியாற்றி வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் யாரும் ஈரோடு பக்கமே எட்டிப்பார்க்கவில்லை. அதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோதிமணி, மாணிக்கம்தாகூர், திருநாவுக்கரசர், கார்த்தி சிதம்பரம், என யாரும் ஈரோட்டை திரும்பிக் கூட பார்க்கவில்லை. செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஒரே ஒரு நாள் மட்டும் ஈரோடு வந்து சென்றார் கே.எஸ்.அழகிரி.

ஈவிகேஎஸ் இளங்கோவன்
களத்தில் நிற்பது கைச் சின்னம் என்று தெரிந்தும் காங்கிரஸ் புள்ளிகள் பிரச்சாரத்தில் ஏனோ ஆர்வம் காட்டவில்லை. இதனிடையே ஈவிகேஎஸ் இளங்கோவனை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியிலிருந்து தனக்காக யாரும் பிரச்சாரத்துக்கு வராததை நினைத்து சிறிதும் கவலைப்படவில்லை. 4 அமைச்சர்களை மட்டுமே அவர் மலை போல் நம்பியிருக்கிறார். அவர்களது களப்பணி தன்னை கரைசேர்க்கும் என தீவிரமாக நம்புகிறார். இதனால் திமுகவினரோடு இணக்கமாக தேர்தல் வேலையாற்றும் அவர் பிரச்சாரத்திலும் ஒன் மேன் ஆர்மியாக கலக்கி வருகிறார்.

சூடுபிடித்த களம்
ஆனால் இதுவரை எப்படியோ தெரியாது, அதிமுக சார்பில் போட்டியிடும் கே.எஸ்.தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்திருப்பதால் அங்கு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கை சின்னத்தைக் காட்டிலும் இரட்டை இலை தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் அதிக பரிச்சயம் பெற்றிருப்பது என்பதால் ஈரோடு கிழக்கில் கூடுதல் உழைப்பை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது திமுக காங்கிரஸ் கூட்டணி.












Click it and Unblock the Notifications