கேப்டன் தமிழகத்தை கைவிடவில்லை. தமிழகம் தான் கேப்டனை கை விட்டுவிட்டது – கலங்கிய விஜய பிரபாகரன்
ஈரோடு: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்தாண்டு உயிரிழந்தார். இப்போதும் சினிமாவிலும், அரசியலிலும் விஜயகாந்த் குறித்து கருத்துகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் தேமுதிக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், கேப்டன் எப்போதும் தமிழகத்தை கைவிடவில்லை. தமிழகம் தான் அவரை கைவிட்டுவிட்டது என்று உருக்கமாக பேசியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தேமுதிக முப்பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விஜய பிரபாகரன் பேசுகையில், "ஆளுநர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை வைத்து திமுக அரசியல் செய்கிறது. ஆளுநர் நிகழ்ச்சியில் பாடப்பட்ட தமிழ் தாய் வாழ்த்தில் திராவிட திருநாடு என்ற வார்த்தை விடப்பட்டு பாடப்பட்டது தவறானது.

ஆனாலும் அதற்கு அவர்கள் மன்னிப்பு கேட்டுவிட்டனர். அதை அதனுடன் முடிப்பது தான் நாகரீகம் என்று கருதுகிறோம். மன்னிப்பு கேட்ட பிறகும், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அந்தப் பிரச்னையை வைத்து தொடர்ந்து அரசியல் செய்கின்றன.
ஒருகட்சி இந்தி படிக்க கூடாது என்கின்றனர். மற்றொரு கட்சி இந்தி படிக்க வேண்டும் என்று கூறுகிறது. மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். அந்த இரண்டு கட்சிகள் தான், மாநிலத்தையும் நாட்டையும் ஆட்சி புரிந்து வருகிறார்கள். இதைத் தான் படிக்க வேண்டும் அல்லது இதை படிக்க கூடாது என்று சொல்ல யாருக்கும் எந்த தகுதியும் இல்லை.
கேப்டன் ஒரு படத்தில் தாய் மொழி கண்கள் போல, வேற்று மொழிகள் கண்ணாடி போல. நமக்கு தேவைப்படும்போது அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசியிருப்பார். நாங்கள் எல்லாரும் தமிழ் படிக்கிறோம். அதில் மிகவும் சந்தோஷம். தமிழ் மொழி படிப்பவர்களுக்கு 100% தமிழ்நாட்டிலேயே வேலை வாய்ப்பு ஏற்படுத்தினால் சரி.
ஆனால் தமிழ் மொழியை மட்டும் கற்றுக்கொண்டு, உள்ளூரில் வேலை கிடைக்காமல் இளைஞர்கள் வேலைக்கு எங்கே செல்வார்கள். ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து வாய்ப்புகள் வருகின்றன. அந்த மொழியை கற்று கொண்டால் தான் அங்கு வாழ முடியும்.
ஒவ்வொருவருக்கும் ஒரு மொழி முக்கியம். அதை குறை சொல்ல முடியாது. தமிழ் மட்டுமல்ல இந்தி, ஆங்கிலம், பிரென்ச் உள்ளிட்ட மொழிகளை கற்று கொள்ள வேண்டும். இந்த உலகில் வானுக்கு இல்லை இல்லை என்பது போல நமது ஞானத்துக்கும், கற்றல் தேடலுக்கும் எல்லை இல்லை. பல்வேறு மொழிகளை கற்று கொள்ள வேண்டும்.
சென்னை, கோவையில் பல இடங்களில் மழை பெய்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் எங்கும் பாதிப்பு இல்லை என போட்டோ ஷூட் நடத்தும் ஆட்சியாக தான் இது இருக்கிறது. உதயநிதி மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தன் அப்பாவால் தேர்வு செய்யப்பட்டவர். அண்ணாவுக்கு பிறகு கருணாநிதி, ஸ்டாலின், தற்போது உதயநிதி வரை வந்துவிட்டனர். இருப்பினும் அவர் பணி சிறக்க வாழ்த்துகள் தெரிவிக்கிறேன். தேமுதிக மட்டும் கேப்டனுக்கு பிறகு அந்தக் கட்சி கிடையாது என்று சொல்கிறார்கள்.
கேப்டன் தமிழகத்தை கைவிடவில்லை. தமிழகம் தான் கேப்டனை கை விட்டுவிட்டது. துளசி வாசம் எப்படி மாறாதோ, அதேபோல தான் தவசி புள்ளை வார்த்தையும் மாறாது. " என்றார்.












Click it and Unblock the Notifications