டாஸ்மாக்கில் மது வாங்கினால் ‘ரசீது’: எல்லா இடத்திலும் விரைவில்! அமைச்சர் முத்துசாமி கொடுத்த அப்டேட்!
ஈரோடு: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபானம் வாங்குபவர்களுக்கு ரசீது வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கையின் போது 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மூடப்படும் என்று அறிவித்தார். அதன்படி 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறிந்து மூடப்பட்டது. அத்துடன் டாஸ்மாக்கில் படிப்படியாக மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி, "தமிழ்நாட்டில் அனுமதியில்லாமல் எந்த பார்களும் இயங்கவில்லை. அவ்வாறு இயங்குவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மது பாட்டில்களால் விவசாயிகளுக்கும், நடந்து செல்லும் பொதுமக்களுக்கும் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் டெட்ரோ பேக் மூலம் மதுவிற்பனை செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
மற்ற மாநிலங்களிலும் டெட்ரா பேக் மது விற்பனை தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர். இதில், அரசியல் கட்சியினரும் கருத்து தெரிவித்துள்ளனர். தொழிற்சங்கத்தினருடனும், அதிகாரிகளுடனும் கருத்து கேட்டு வருகிறோம். டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு ரூ.5, ரூ.10 கூடுதலாக வாங்குவது 99% தடுக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு ரசீது கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ரசீது வழங்க ஏற்பாடு செய்யப்படும். இந்த திட்டம் நடைமுறைப்படுத்தும் போது அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் ஒரு எந்திரம் வழங்கப்பட்டு, மது வாங்குபவர்களுக்கு ரசீது வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் மதுபானக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதால், பில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. டாஸ்மாக் கடைகளில் எம்ஆர்பி விலைக்கே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதனை நிறைவேற்றும் வகையில், டாஸ்மாக் கடைகளில் 'பில்' வழங்கப்படும் என அமைச்சர் கூறியிருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது.

முன்னதாக, டாஸ்மாக் கடை தொடர்பாக நிறைய சீர்திருத்தங்கள் செய்ய வேண்டி உள்ளது. இந்த சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள ஒரு மாத கால அவகாசம் கேட்டுள்ளோம். டாஸ்மாக் கடைகளில் உள்ள சிக்கல்களை தீர்க்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டாஸ்மாக் தொடர்பாக தவறாக கருத்துகள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது. ஒரு மாத காலத்தில் டாஸ்மாக் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications