"பேசவே பேசாதீங்க".. ஓபிஎஸ் சொன்ன ஒரு வார்த்தை.. கடுப்பான நிர்வாகிகள்.. கூண்டோடு ராஜினாமா ஏன்?
இரண்டு நாட்களுக்கு முன் ஓ பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்களின் உட்கட்சி கூட்டம் நடந்தது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் ஈரோடு கிழக்கு ஓ பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் கூண்டோடு அவர் அணியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். இந்த ராஜினாமாவிற்கு பின் ஓ பன்னீர்செல்வம் சொன்ன ஒரு வார்த்தைதான் காரணம் என்று கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தமிழ்நாடு தேர்தல் களத்தில் வெப்பத்தை கூட்டி உள்ள நிலையிலும் கூட ஓ பன்னீர்செல்வம் பெரிதாக வெளியே வராமல் அமைதியாக இருக்கிறார். பாஜக தரப்பு தனக்கு உரிய சப்போர்ட்டை வழங்கவில்லை என்று ஓ பன்னீர்செல்வம் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் கடுமையான அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் அரசியல் ரீதியாக ஓ பன்னீர்செல்வத்திற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. தொட்டதெல்லாம் தோல்வி என்று சொல்லும் அளவிற்கு மிகப்பெரிய சரிவை ஓ பன்னீர்செல்வம் சந்தித்து இருக்கிறார்.

தொட்டதெல்லாம் தோல்வி
சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும், அதை பொதுக்குழு உறுப்பினர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பொதுக்குழுவை உடனே கூட்ட முடியாத பட்சத்தில் கடிதம் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆலோசனையை பெற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு இடைக்கால உத்தரவு போட்டது. அதன்படியே எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வேட்பாளர் தென்னரசு பொது வேட்பாளர் ஆனார். அதோடு அவருக்கு சின்னமும் கிடைத்தது. இதையடுத்து ஓ பன்னீர்செல்வம் தனது தரப்பு வேட்பாளர் செந்தில் போட்டியில் இருந்து விலகுவார் என்று அறிவித்தார்.

பெரும் பின்னடைவு
இதனால் ஈரோடு கிழக்கு ரேஸில் இருந்தே ஓபிஎஸ் டீம் வெளியேறியது. இதையடுத்து எடப்பாடி தரப்பு வேட்பாளரை ஆதரிப்பதாக அண்ணாமலை கூறினார். அண்ணாமலை ஒரு படி மேலே போய் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளர் என்று கூறி அறிக்கை வெளியிட்டார். ஓ பன்னீர்செல்வத்தை அதில் வெறும் அண்ணன் என்று குறிப்பிட்டு இருந்தார். இதனால் பாஜக சப்போர்ட்டும் எடப்பாடிக்கு கிடைத்துவிட்டதாக பிம்பம் ஏற்பட்டது. இதுவும் ஓ பன்னீர்செல்வத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தவே, ஓபிஎஸ் நிர்வாகிகள் கடும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

என்ன சொன்னார்?
இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் ஓ பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்களின் உட்கட்சி கூட்டம் நடந்தது. இதில் பேசிய ஓ பன்னீர்செல்வம், ஈரோடு கிழக்கு பிரச்சாரத்தில் யாரும் அதிமுகவை விமர்சனம் செய்ய வேண்டாம். அதேபோல் பாஜக, திமுகவையும் விமர்சனம் செய்ய வேண்டாம். அவர்களின் தயவும் நமக்கு தேவை. ஜெயலலிதா பெயரை மட்டும் சொல்லி வாக்கு கேளுங்கள். யாரையும் விமர்சனம் செய்ய வேண்டும், என்று கூறி இருக்கிறார். முக்கியமாக ஈரோடு கிழக்கில் அப்செட்டில் இருக்கும் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் முருகானந்தம் அணியினரிடம் கொஞ்சம் ஓபிஎஸ் கண்டிப்பாக பேசியதாக கூறப்படுகிறது.

கண்டிப்புடன் பேசினார்
இதை கேட்ட நிர்வாகிகள்.. யாரையும் பற்றி எதிராக பேச கூடாது என்றெல்லாம் இவருடன் நாங்கள் ஏன் இருக்க வேண்டும். அதிமுகவை, பாஜகவை எதிர்க்க வேண்டாம் என்றால் ஓகே. ஆனால் திமுகவை கூட எதிர்க்க கூடாது. இதற்கு இவர் ஏன் தனி அணி வைத்து இருக்க வேண்டும். இவரை நம்பி வந்தோம். ஆனால் சின்னமும் இல்லை. வேட்பாளரும் இல்லை. அவர் இப்படி பின்வாங்குவார் என்று தெரிந்து இருந்தால் அவர் பக்கமே சென்று இருக்க மாட்டோம், என்று புலம்பி இருக்கின்றனர். யார் பற்றியும் பேசாதீங்க என்று ஓபிஎஸ் சொன்னது ஈரோடு கிழக்கு நிர்வாகிகளை கடும் அதிருப்திக்கு உள்ளாகிஇருக்கிறதாம்

ஓபிஎஸ் ராஜினாமா
இதையடுத்து ஈரோடு கிழக்கு ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் அப்படியே கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். . ஓபிஎஸ் அணி வேட்பாளராக முருகானந்தம் அறிவிக்கப்படுவார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் செந்தில் முருகன் அறிவிக்கப்பட்டார். அப்போதே முருகானந்தம் அப்செட்டில் இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில்தான் நேற்று ஓபிஎஸ் பேசியது சர்ச்சையாகி உள்ளது. இதையடுத்தே கடுப்பான அவர்கள் ஓபிஎஸ் அணியில் இருந்து வெளியேறி உள்ளனர். பெரும்பாலும் அவர்கள் எடப்பாடி பழனிசாமி அணிக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications