தினமும் டார்ச்சர்.. புருஷனை வாயிலேயே வெட்டிய ஈஸ்வரி.. ஈரோட்டில் பரபரப்பு
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே தினமும் குடிச்சிட்டு வந்து கலாட்டா செய்த கணவர் பாலுவை, அவரது மனைவி ஈஸ்வரி சரமாரியாக வெட்டினார். கழுத்து, வாயில் வெட்டுப்பட்டு பாலு பரிதாபமாக உயிரிழந்தார்.
குடிப்பழக்கம் பலரது குடும்பங்களை அழித்து வருகிறது. குடிப்பழக்கத்தால் குடும்பத்திற்குள் ஏற்படும் சண்டைகள் கொலையில் முடிகின்றன. பல வீடுகளில் தினசரி நடக்கும் வன்முறைகளுக்கு குடிபழக்கம் முக்கியமான காரணமாக இருக்கிறது. குடிப்பழக்கத்தால் சரியாக வேலைக்கு போகாமல் வருமானம் ஈட்டுவது இல்லை. அப்படியே வருமானம் ஈட்டினாலும் அதையும் மதுக்கடைகள் கொண்டு போய் கொடுத்துவிட்ட சொற்ப பணத்துடன் வீடு வரும் ஆண்கள் அதிகரித்துவிட்டார்கள்.

குடிப்பழக்கத்தால் சமூகத்தில் பெரிய அளவில் பொருளாதாரம், உடல் நலம் மற்றும் மனநலம் மூன்றிலும் பாதிக்கப்படும் ஆண்கள் அவர்களின் குடும்பத்தை இறுதியாக அழிக்கவும் செய்கிறார்கள்.அல்லது அவர்கள் சண்டை போட்டு அழிந்து போகவும் செய்கிறார்கள். அப்படித்தான் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நடந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள நஞ்சியம்பாளையம் புதூரை சேர்ந்த 63வயது முதியவர், சென்னிமைலை அருகே ரொட்டி கடையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஈஸ்வரிக்கு 58 வயது ஆகிறத. இவர்கள் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே நாமக்கல்பாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
பாலு ரொட்டி கடையில் வேலை செய்துவிட்டு மாலையில் தினமும் குடித்துவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அத்துடன் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவி ஈஸ்வரிடம் தகராறில் ஈடுபடுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளாராம்.
அப்படித்தான் சனிக்கிழமை இரவு பாலு அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு, போதையில் தள்ளாடியபடி வீட்டுக்கு வந்தாராம் அப்போது கணவன், மனைவிக்கு இடையே குடிபழக்கம் தொடர்பாகதகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது ஈஸ்வரியை பாலு பலமாக தாக்கி உள்ளாராம். இதனால் பொறுக்க முடியாமல் ஆத்திரம் அடைந்த ஈஸ்வரி அரிவாளை எடுத்து பாலுவை கழுத்து, வாய் ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டி உள்ளார். வெட்டுப்பட்ட பாலு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பாலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் ஈஸ்வரியை கைது செய்து சிறையில் அடைத்தனர். குடிபோதையில் தகராறு செய்து வந்த கணவரை மனைவியே அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications