தீரன் சின்னமலையின் படைத்தளபதி மாவீரர் பொல்லானுக்கு சிலை! ஜரூராக நடக்கும் பணிகள்! அமைச்சர் ஆய்வு!
தீரன் சின்னமலையின் படைத்தளபதி பொல்லானுக்கு சிலையுடன் கூடிய அரங்கம்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் படைத்தளபதி மாவீரர் பொல்லானுக்கு சிலை நிறுவுவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
மாவீரர் பொல்லானுக்கு சிலை நிறுவப்பட வேண்டும் என்பது கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி உட்பட கொங்கு மண்டல அமைப்புகள் முன் வைத்த கோரிக்கையாகும்.
இது தொடர்பான விவரம் வருமாறு;

தீரன் சின்னமலை படைத்தளபதி
மாவீரர் பொல்லான் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு என்பது, நாட்டிற்கு மிகப்பெரிய தியாகம் செய்த தியாகியாக உள்ளார். மூன்று பெரிய போர்களிலே தீரன் சின்னமலையோடு இணைந்து, ஆங்கிலேயர்களை எதிர்த்து மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது ஆங்கில அரசாங்கம், அவர்களுடைய படை என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கிறது, என்னென்ன திட்டங்களை அவர்கள் வகுக்கிறார்கள் என்பதை எல்லாம் பொல்லான் எப்படியோ அறிந்து தான் தீரன் சின்னமலையிடம் அதை தெரிவித்து, அவர்களுடன் இணைந்து, அந்த வெற்றியை பெறுவதற்கு மிகப்பெரிய உதவியாக இருந்தவர் மாவீரர் பொல்லான்.

மாவீரர் பொல்லான்
மேலும், மாவீரர் பொல்லான் வாழ்க்கை வரலாற்றினை இன்றைய சந்ததியினர் அறிந்திடும் வகையில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட, வடுகப்பட்டி இ கிராமம், ஜெயராமபுரத்தில் தமிழ்நாடு பூமிதான வாரியம், சென்னைக்கு சொந்தமான சுமார் 0.16.6 ஹெக்டேர் (41.00) சென்ட் பரப்பளவில் சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான இடம் புலத்தணிக்கை மேற்கொண்டு சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அரசிற்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் நேரில் ஆய்வு
ஜெயராமபுரத்தில் சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்கான தேர்வு செய்யப்பட்ட இடத்தினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அலுவலர்களுடன் சென்று பார்வையிட்டார். அவருடன் மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ் மற்றும் அரசு அலுவலர்களும் பார்வையிட்டனர்.

கோரிக்கை
மாவீரர் பொல்லானுக்கு சிலை நிறுவப்பட வேண்டும் என்பது கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி உட்பட கொங்கு மண்டல அமைப்புகள் முன் வைத்த கோரிக்கையாகும். விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக திறப்பு விழா நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications