ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி.. சூட்டோடு சூடாக வி.சி.சந்திரகுமார் போட்ட ஃபேஸ்புக் பதிவு!
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, "இது பெரியார் மண்.. இது திராவிட மண்" என ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 5 ஆம் தேதி நடைபெற்றது. தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்ளில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார்.
வாக்கு எண்ணிக்கை முடிவில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 114,982 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 23,940 வாக்குகள் பெற்றுள்ளார். இதன் மூலம் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 91,042 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். நோட்டா 6066 வாக்குகளை பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சி உட்பட திமுகவை எதிர்த்துப் போட்டியிட்ட அத்தனை வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
வாக்கு எண்ணிக்கையின் போது மூன்று பெட்டிகளில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. பழுதடைந்த 3 இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகள் மட்டுமே தற்போது எண்ணப்படுகின்றன. இந்த எண்ணிக்கை நிறைவடைந்ததும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றியைத் தொடர்ந்து, ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார். "இது பெரியார் மண்.. இது திராவிட மண்" என ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார்.
முன்னதாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து திமுக வேப்டாளர் வி.சி.சந்திர குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவின் வெற்றியை முதல்வருக்கு சமர்ப்பிக்கிறேன். மேலும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும், இடைத்தேர்தலில் என்னை வழிநடத்தி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஃபார்முலாவை உருவாக்கிய அமைச்சர் முத்துசாமி உட்பட அனைவருக்கும் நன்றி.
மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி. எவ்வளவு அவதூறு கருத்துகளை பரப்பினாலும் இறுதியில் திமுகவே வென்றுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக வென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார்" என்று தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு முன்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. சீமானுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
ஈரோட்டைச் சேர்ந்த பெரியார் பற்றி சீமான் பேசியது கொதிப்பை ஏற்படுத்தி இருந்ததால், ஈரோட்டில் சீமானுக்கு எதிர்ப்புகளும் எழுந்தன. இந்நிலையில் தான், திமுகவின் வெற்றிக்குப் பிறகு, "இது பெரியார் மண்" எனப் பதிவிட்டுள்ளார் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சந்திரகுமார்.












Click it and Unblock the Notifications