பட்டா மாறுதல்.. ஈரோடு விஏஓவுக்கு விவசாயி செய்த தரமான சம்பவம்.. மொத்த கிராமமும் ஆடிப்போச்சு
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த ஆப்பக்கூடல் பகுதியில் பட்டா மாறுதலுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரையும், இடைத்தரகரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். ஆப்பக்கூடல் அருகே உள்ள வேம்பத்தி செல்லப்பகவுண்டன்வலசு பகுதியை சேர்ந்த கதிர்வேல் என்ற விவசாயி, பட்டா மாறுதல் செய்ய சென்ற போது ரூ.3 ஆயிரம் கொடுத்தால் தான் பட்டா மாறுதல் செய்து தர முடியும் என்று விஏஓ கூறியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தான் விஏஓவும், புரோக்கரும் கைதாகி உள்ளனர்.
வருவாய் துறையில் பட்டா மாறுதல், நிள அளவைக்கு லஞ்சம் கேட்பது ஆங்காங்கே நடக்கிறது. அப்படி லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது புகார் அளிக்க முடியும். அப்படி புகார் அளித்தால் உடனடியாக லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்.. கடந்த இரண்டு நாட்களில் ஏராளமான அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய புகாரில் கைதாகி உள்ளார்கள். அவர்கள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி அருகே நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம். பவானி அடுத்த ஆப்பக்கூடல் அருகே உள்ள வேம்பத்தி செல்லப்பகவுண்டன்வலசு என்ற கிராமத்தைச் சேர்ந்த 44 வயதாகும் கதிர்வேல் என்ற விவசாயி, தனது விவசாய நிலத்துக்கு பட்டா மாறுதல் செய்ய முடிவு செய்தார். இதற்காக மேம்பத்தி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் ஒலகடம் பகுதியை சேர்ந்த 30 வயதாகும் பிரகாஷ் என்பவரை சந்தித்தாா்.
அப்போது அவரிடம் விஏஓ பிரகாஷ் பட்டா மாறுதல் செய்ய ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கேட்டதாக சொல்லப்படுகிறது. அதற்கு விவசாயி கதிர்வேல் மறுத்துவிட்டாராம். இதனால் ரூ.3 ஆயிரம் கொடுத்தால் தான் பட்டா மாறுதல் செய்து தர முடியும் என்று விஏஓ பிரகாஷ் தெரிவித்தாராம்.
ஆனால் விஏஓ கேட்டதாக கூறப்படும் லஞ்சத்தை கொடுக்க விருப்பமில்லாத கதிர்வேல் இதுகுறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை காவல்நிலையத்திற்கு வந்து நடந்த சம்பவங்களை கூறி புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து கதிர்வேலிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரத்தை கொடுத்து அதை கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்குமாறு தெரிவித்தனர்.
அதன்படி அவர் அந்த பணத்துடன் நேற்று பவானி அருகே உள்ள மேம்பத்தி கிராம நிர்வாக அலுவலகம் சென்று கிராம நிர்வாக அலுவலர் பிரகாசிடம் கொடுத்தாராம். அதற்கு அவர் பணத்தை அவரது அருகில் நின்று கொண்டிருந்த செல்லப்பகவுண்டன்வலசை சேர்ந்த இடைத்தரகர் அருள்ராஜா (39) என்பவரிடம் கொடுக்க சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் கதிர்வேல் அவரிடம் பணத்தை கொடுத்தார்.
உடனே அங்கு மறைந்திருந்த ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ் மற்றும் இடைத்தரகர் அருள்ராஜா ஆகியோரை கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் ஆப்பக்கூடல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications