மேடையில் ஸ்டாலின் அடித்த ‘டைமிங்’ கமெண்ட்.. சட்டென சிரிப்பலை.. திரும்பி பார்த்து சிரித்த ஜோதிமணி!
ஈரோடு: திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், மேடையில் அடித்த டைமிங் கமெண்ட்டை அனைவரும் ரசித்தனர். கரூர் வேட்பாளரும், சிட்டிங் எம்.பியுமான ஜோதிமணி, பின்னால் திரும்பிப் பார்த்துச் சிரித்தார்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையத்தில் இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணியின் லோக்சபா தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் நாமக்கல் தொகுதி வேட்பாளர் மாதேஸ்வரன், ஈரோடு தொகுதி வேட்பாளர் பிரகாஷ், கரூர் தொகுதி வேட்பாளர் ஜோதிமணி ஆகியோரை அறிமுகப்படுத்தி, திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து உரையாற்றினார் திமுக தலைவர் ஸ்டாலின்.

ஸ்டாலின் பிரச்சாரம்: இந்தக் கூட்டத்தில் பேசத் தொடங்கிய ஸ்டாலின், "பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்" என்று முத்தமிழறிஞர் கலைஞரால் பாராட்டப்பட்ட தந்தை பெரியார் பிறந்த மண்ணிற்கு வந்திருக்கிறேன்! திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் பேரியக்கத்தை உருவாக்கிய பேரறிஞர் அண்ணா பணியாற்றிய ஈரோட்டிற்கு வந்திருக்கிறேன். நம்மை எல்லாம் ஆளாக்கிய கலைஞரின் குருகுலத்திற்கு வந்திருக்கிறேன்! இத்தகைய பெருமைமிகு மண்ணில் நடைபெறும் இந்த பிரம்மாண்டமான பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கும் அனைவர்க்கும் என் மாலை வணக்கம்!
இந்த மண்ணிற்குத்தான் எத்தனை எத்தனை பெருமைகள் உண்டு! வெள்ளையரை எதிர்த்துப் போர் நடத்திய மாவீரன் தீரன் சின்னமலை மண்! "தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவற்கொரு குணமுண்டு" என்று உணர்ச்சிக் கனலை எழுப்பிய நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் மண்! சேரர்களின் தலைநகராகத் திகழ்ந்த மண்! இப்படி ஈரோடு - நாமக்கல் - கரூர் ஆகிய மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளையும் கொண்ட இந்த மண்ணிலிருந்து, நாடு காக்கும் ஜனநாயகப் போர்க்களத்திற்கு அழைப்பு விடுக்க வந்திருக்கிறேன். இந்தக் கூட்டமானது முக்கடல்களும் ஒன்று கூடியது போன்று காட்சியளிக்கிறது.
3 வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்த ஸ்டாலின்: திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஈரோடு தொகுதி வெற்றி வேட்பாளர் தம்பி பிரகாஷ், சிறு வயதில் இருந்தே தி.மு.க.வில் இணைந்து மக்களுக்காகப் பணியாற்றுபவர். அவரின் தந்தை 1977-ஆம் ஆண்டு முதல் கிளைச் செயலாளராகப் பணியாற்றியவர். அப்பாவைப் போன்றே மகனும் அரசியல் ஆர்வம் கொண்டவர். என்னுடைய தலைமையில், ஈரோடு தி.மு.க இளைஞரணி அமைப்பாளராகப் பணியாற்றிய இவர். இப்போது மாநிலத் துணைச் செயலாளராகத் தம்பி உதயநிதிக்குத் துணையாக நிற்கிறார். இவர் ஈரோட்டு மக்களுக்காக - துணையாக நிற்க நாடாளுமன்றத்தில் பணியாற்ற பிரகாஷ் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
கரூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சகோதரி ஜோதிமணி கடந்த முறை 4 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இந்த முறை அதைவிடவும் கூடுதலான வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற வைக்க வேண்டும். மகளிர், குழந்தைகள் மற்றும் சமூக மேம்பாடுகளில் அக்கறை கொண்ட அவரை, நாடாளுமன்றத்திற்கு மீண்டும் அனுப்ப, கரூர் மக்கள் ஜோதிமணி அவர்களுக்குக் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நாமக்கல் தொகுதியில் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் மாதேஸ்வரன் பிறந்தது சேந்தமங்கலம் - வாழ்வது நாமக்கல் - திருமணம் செய்து கொண்டது திருச்செங்கோடு என்று, மூன்று சட்டமன்றத் தொகுதிக்குத் தொடர்புடையவர். மக்களோடு மக்களாக இருந்து சமூக சேவையும் செய்யும் அவரை, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்துப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
ஸ்டாலின் அடித்த கமெண்ட்.. பட்டென சிரித்த தலைகள்: இங்கு கூடியிருக்கும் உங்கள் எழுச்சியைப் பார்க்கும்போது மேடையில் இருக்கும் மூன்று வேட்பாளர்களுக்கும் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில், மாபெரும் வெற்றியைத் தர முடிவு செய்துவிட்டீர்கள் என்பது தெரிகிறது. இவர்களை வெற்றி பெற வைக்கத் தயாரா?" எனக் கேட்டார். அதற்கு கூட்டத்தில் இருந்த திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் உற்சாக ஆரவாரம் செய்தனர்.
இதையடுத்து, மேடையில் கைகூப்பியபடி நின்றிருந்த 3 வேட்பாளர்களையும் பார்த்து, "இப்போ 3 பேரும் போய் உட்காருங்க.. உங்களுக்கு சீட் கிடைச்சிருச்சு" எனக் கூறினார் ஸ்டாலின். டைமிங்கில் ஸ்டாலின் இப்படி சொன்னதைக் கேட்டு மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ரசித்துச் சிரித்தனர். சீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த கரூர் வேட்பாளர் ஜோதிமணி, பின்னால் திரும்பிப் பார்த்து சிரித்தார்.












Click it and Unblock the Notifications