“சூப்பர்”.. வேட்பாளரான யூடியூபர்! ஈரோடு கிழக்கு தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டி - வேற லெவல் காரணம்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் பிரபல யூடியூபர் தீபன் சக்கரவர்த்தியும் சுயேட்சையாக போட்டியிடுகிறார்
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலில் இறுதி செய்யப்பட்டு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கும் நிலையில், பிரபல யூடியூபர் தீபன் சக்கரவர்த்தியும் இதில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதற்கு அவர் சொல்லும் காரணமே வித்தியாசமாகவும், ஆச்சரியமாக உள்ளது.
நாமக்கல்லை சேர்ந்தவர் தீபன் சக்கரவர்த்தி. தமிழ் செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றி வந்த இவர், பயணங்களின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக பணியிலிருந்து விலகி யூடியூப் சேனலை தொடங்கி பல பகுதிகளுக்கு இரு சக்கர வாகனத்திலேயே பயணித்து வருகிறார்.
தமிழ்நாடு முழுவதும் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள், உணவு பொருட்களின் வரலாற்றையும், அதை தயாரிக்கும் தொழிலாளர்கள் குறித்தும் அந்த பகுதிக்கு சென்று வீடியோ எடுத்து ஆவணப்படமாக வெளியிட்டு இருக்கிறார்.

யூடியூபர் தீபன் சக்கரவர்த்தி
இலங்கை, தாய்லாந்து, மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு சென்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். பயணம், மக்களின் வாழ்வியல், சமூகத்தின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக சுற்றுலா சார்ந்த வீடியோக்களை மட்டும் வெளியிடாமல், அங்குள்ள மக்களின் வாழ்வியலையும் தன்னுடைய Chennai Vlogger என்ற யூடியூப் பக்கத்தில் காட்சிபடுத்தி வருகிறார்.

தேர்தலில் போட்டி
அதேபோல் அரசு திட்டங்கள், அரசியல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக இளைஞர்கள் அரசியலுக்கு வருவதை ஊக்குவிக்கும் வகையில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரிவாக விளக்கும் வகையில் தானே வேட்புமனுவை தாக்கல் செய்து அது குறித்து விளக்கங்களை வழங்கி வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் லாரி சின்னத்தில் இவர் போட்டியிட்டார்.

போட்டியிடுவது ஏன்?
தேர்தலில் வெற்றிபெற மாட்டோம் என்று தெரிந்தாலும், தேர்தலில் எப்படி போட்டியிடுவது, அதற்கான ஆவணங்களை எப்படி தாக்கல் செய்வது, எப்படி பிரச்சாரம் என்பது குறித்தும் மக்களுக்கு விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இவ்வாறு செய்ததாக அவர் கூறி இருக்கிறார். அரசியல் சார்ந்த சினிமாக்கள் சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியதாக இவர் நம்புகிறார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
அதை பின்பற்றி தானும் ஏதாவது ஒரு வகையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இவ்வாறு செய்கிறார். இந்த நிலையில்தான் இம்மாதம் நடைபெற இருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிடுவதற்காக இவர் வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளார். அந்த வேட்புமனு ஏற்கப்பட்டு இவருக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

77 வேட்பாளர்களில் ஒருவர்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் 77 வேட்பாளர்களில் தீபன் சக்கரவர்த்தியும் ஒருவர். இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு இருக்கும் தீபன் சக்கரவர்த்தி, "அரசியல் என்னும் அதிகாரம் உங்களை சாதாரணமாக உள்ளே விடாது. தடுக்கும். முட்டி மோதும். அதையெல்லாம் கடந்துதான் வரவேண்டும்." என்றார்.

தேர்தல் குறித்து விழிப்புணர்வு
தேர்தலில் போட்டியிடுவது குறித்து பேசும் தீபன் சக்கரவர்த்தி, "இந்தியாவின் இளைஞர்கள் நம் நாட்டை அரசியல் தவிர்த்து மற்ற அனைத்து துறைகளிலும் மேலும் வலிமையானதாக, புத்திசாலித்தனமானதாக உருவாக்கி வருகிறார்கள். தேர்தல் நடைமுறைகள் குறித்து இளைஞர்கள் உட்பட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே போட்டியிடுகிறேன்.

இளைஞர்களுக்கு தெரியவில்லை
பல இளைஞர்களுக்கு எப்படி தேர்தலில் போட்டியிடுவது என்பதே தெரியவில்லை. எப்படி வேட்புமனுவை தாக்கல் செய்ய வேண்டும்? அபிடவிட் என்றால் என்ன? என்னென்ன ஆவணங்கள் தேவை? என அறியாமல் உள்ளனர். செய்தித்தாள்களில் விளம்பரம் செய்வதற்கும் வாகனங்களில் ஊர்வலம் செல்வதற்கும் என்னிடம் நிறைய பணம் இல்லை." என்று அவர் கூறினார்.
|
சமூக வலைதளங்களில் பிரச்சாரம்
எனவே பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் மூலம் எப்படி பிரச்சாரம் செய்வது என்ற மாதிரியான வீடியோக்களை அவர் வெளியிட்டு வருகிறார். 2021 தேர்தலில் நாமக்கல் தொகுதியில் நோட்டீஸ்களை அச்சிட்டு பொதுமக்களிடம் அவர் வாக்கு சேகரித்தார். "என்னுடைய நோட்டீஸ்களை மக்கள் சிரித்த முகத்தோடு வாங்கிக்கொள்கின்றனர்.

வெளிப்படைத்தன்மை
ஆனால், ஓட்டு போடுவார்களா? என்பது சந்தேகமே. வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுவேன். அரசின் அனைத்து செயல்பாடுகளையும் மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் ஒரு சட்டமன்ற உறுப்பினராக நடந்துகொள்வேன். எவ்வளவு நிதி செலவு செய்கிறேன் என அனைத்தையும் சொல்வேன்." என்கிறார் தீபன் சக்கரவர்த்தி.












Click it and Unblock the Notifications