கோவா: திரிணாமுல் காங். பொறுப்பாளராக பாஜகவின் 'சிம்மசொப்பனம்' மஹூவா மொய்த்ராவை நியமித்தார் மமதா!
பனாஜி: கோவா சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் அம்மாநிலத்துக்கான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளராக மஹூவா மொய்த்ராவை கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி நியமித்துள்ளார்.
40 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட கோவாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க 21 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை.

பாஜகவால் காங். எம்.எல்.ஏக்கள் கபளீகரம்
கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் 13 இடங்களில் வென்ற பாஜகவோ மாநில கட்சிகள் சுயேட்சைகள் ஆதரவு ஆட்சி அமைத்தது. இதன் பின்னர் 2 ஆண்டுகளுக்கு முன்னர் கொத்து கொத்தாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜக கபளீகரம் செய்தது.

பலவீனமான காங்.
தற்போதைய நிலையில் கோவா சட்டசபையில் வெறும் 4 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர். அந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சி பலவீனப்படுத்தப்பட்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் முன்னாள் முதல்வர் லூயிசின்ஹோ பலீரோ, காங்கிரஸ் கட்சிக்கு முழுக்குப் போட்டுவிட்டு மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தாவினார். தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய துணைத் தலைவராகவும் லூயிசின்ஹோ ஃபலீரோ நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறும் ராஜ்யசபா தேர்தலில் லூயிசின்ஹோ ஃபலீரோவை வேட்பாளராகவும் அறிவித்திருக்கிறார் மமதா பானர்ஜி.

கோவாவில் திரிணாமுல் காங்.
மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கால் பதித்திருக்கும் மமதா பானர்ஜி, கோவாவில் காங்கிரஸ் செல்வாக்கை இழந்த நிலையில் கால் பதித்திருக்கிறது. இம்மாநிலத்தில் தற்போதைய பாஜகதான் பலமாக இருக்கிறது. சட்டசபை தேர்தல்கள் தொடர்பான கருத்து கணிப்புகளில் பாஜகவுக்கே அதிக இடங்கள் கிடைக்கும்; காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு சிங்கிள் டிஜிட் இடங்கள்தான் என தெரிவிக்கப்பட்டிருந்தன. அத்துடன் சிவசேனா கட்சியும் கோவா தேர்தலில் போட்டியிடுகிறது. கோவாவில் பாஜகவுக்கு எதிரான அத்தனை கட்சிகளும் ஆளுக்கு ஒரு திசையில் தனித்து போட்டியிடுகின்றன. இது பாஜகவின் வெற்றியை உறுதி செய்யும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

பொறுப்பாளர்
இந்நிலையில்தான் கோவா மாநில திரிணாமுல் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக லோக்சபா எம்.பி. மஹூவா மொய்த்ராவை நியம்மித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் மமதா பானர்ஜி. அமெரிக்கா பணியை தூக்கி எறிந்துவிட்டு காங்கிரஸில் இணைந்து அரசியலுக்கு வந்தார். பின்னர் மமதாவின் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். 2019 லோக்சபா தேர்தலில் வென்று எம்.பி.யானார். நாடாளுமன்றத்தில் மஹூவா மொய்த்ரா பேசுகிறார் எனில் அனைவரது கவனமும் அவரது ஆவேசமான உரையை கேட்பதில் மும்முரமாக இருக்கும். லோக்சபாவிலும் சரி, மேற்கு வங்க அரசியல் களத்திலும் பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்பவர் மஹூவா மொய்த்ரா. அப்படியான மஹூவை பாஜகவுக்கு எதிராக கோவா மாநில பொறுப்பாளராக அனுப்பி வைத்திருக்கிறார் மமதா பானர்ஜி. இதனால் வரும் கோவா தேர்தல் களம் அனல் பறக்கத்தான் போகிறது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications