அரசியல் காழ்புணர்ச்சியுடன் தமிழக அரசு செயல்படுகிறது: உச்ச நீதிமன்றத்தில் ராஜேந்திரபாலாஜி விளக்க மனு
முடித்து வைக்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கை தமிழக அரசு மீண்டும் தோண்டி எடுப்பதற்கு பின் அரசியல் உள்நோக்கம் உள்ளது, என் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசு இவ்வாறு செயல்படுகிறது என உச்ச நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார்.

ராஜேந்திரபாலாஜி வழக்கில் மீண்டும் விசாரணை
தமிழக அரசு ராஜேந்திர பாலாஜியின் சொத்துகுவிப்பு வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்கியதை எதிர்த்தும், மூன்றாவது நீதிபதி விசாரணையை ரத்து செய்யக்கோரியும் ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு, 5% வருமானம் குவித்தார் என்பதை நாங்கள் விசாரணை நடத்தியபோது 70% வரை சொத்து சேர்த்துள்ளார் என்று தெரிய வந்துள்ளதால் மறுவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தது. இதை எதிர்த்து தற்போது ராஜேந்திர பாலாஜி விளக்கமனு தாக்கல் செய்துள்ளார்.

அரசின் செயலில் உள்நோக்கம் உள்ளது
அவரது விளக்கமனுவில் "முன்னதாக இந்த வழக்கில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது 5%க்கு குறைவாகவே உள்ளது என கூறிய தமிழக அரசு தற்போது முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளது. தற்போது அரசு 70%க்கும் அதிகமான அளவு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புதிய கதை கூறுகிறது, எப்படி அரசு இவ்வாறு மாறி மாறி ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியும் ? எனவே இதில் உள்நோக்கம் உள்ளது.

முடித்து வைக்கப்பட்ட வழக்கை தோண்டுவதா?
ஏற்கனவே நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு முடித்து வைக்கப்பட்ட வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது, அவ்வாறு எப்படி செய்ய முடியும்? முடித்து வைக்கப்பட்ட வழக்கை 4 ஆண்டுகள் கழித்து சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து மீண்டும் விசாரித்தது முற்றிலும் தவறு.

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறார்கள்
இதில் அரசியல் உள்நோக்கமும், காழ்ப்புணர்ச்சியும் உள்ளது, எனவே என் மீதான வழக்கு விசாரணையை ரத்து செய்ய வேண்டும்" என மனுவில் கோரியுள்ளார். இந்த வழக்கின் விசாரணையில் மேற்கண்ட பதில்கள் பதிவு செய்யப்பட்டு வாதங்கள் தொடரும் என தெரிகிறது.

வழக்கின் பின்னணி என்ன:-
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 2011 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சுமார் 7 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்தது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை என்பதால், ராஜேந்திர பாலாஜி மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதிகளின் மாறுப்பட்ட தீர்ப்பு
இந்த வழக்கை விசாரித்த, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். அதில், நீதிபதி சத்தியநாராயணன் சொத்து குவிப்பு புகார் குறித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும் எனவும், நீதிபதி ஹேமலதா காலதாமதமான வழக்கை மேற்கொண்டு விசாரிப்பதால் எவ்வித பலனும் இல்லை என்று கூறி மகேந்திரன் வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் தீர்ப்பளித்தனர்.

3 வது நீதிபதிக்கு வழக்கு மாற்றம் - உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை
மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டதால், இந்த வழக்கில் 3 வது நீதிபதி கருத்தை அறிய வழக்கு விசாரணை மாற்றப்பட்டது. இந்நிலையில் 3 வது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டதை எதிர்த்தும், வழக்கு விசாரணைக்கு தடைகோரியும் ராஜேந்திர பாலாஜி கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் உயர்நீதிமன்ற 3 வது நீதிபதி உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழக அரசு ராஜேந்திர பாலாஜியின் சொத்துகுவிப்பு வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்கியதை எதிர்த்தும், மூன்றாவது நீதிபதி விசாரணையை ரத்து செய்யக்கோரியும் ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தமிழக அரசின் பதில்
இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு, 5% வருமானம் குவித்தார் என்பதை நாங்கள் விசாரணை நடத்தியபோது 70% வரை சொத்து சேர்த்துள்ளார் என்று தெரிய வந்துள்ளதால் மறுவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தது. இதை எதிர்த்தே தற்போது ராஜேந்திர பாலாஜி விளக்கமனு தாக்கல் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications