7 மாத குழந்தை இதய நோய் பாதிப்பு.. உங்களின் சிறிய உதவி வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்
சென்னை: கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள 7 மாத குழந்தைக்கு உதவுங்கள். சிறிய உதவி கூட பெரிய மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.
திருவள்ளூர் மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் பாபு. இவருக்கு சமீபத்தில் திருமணமான நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் அழகான பெண் குழந்தை பிறந்தது. அன்றாடம் கூலி வேலை செய்து வாழ்க்கையை நடத்தும் இந்த குடும்பத்திற்கு இந்த குழந்தை பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. வேலை எவ்வளவு கஷ்டமானதாக இருந்தாலும் குழந்தையை பார்க்கும் போது எல்லாம் பறந்து போய்விடும். அப்படிதான் இந்த பாபு-ஹேமாவதி தம்பதியினர் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.

ஆனால் எதிர்பாராத அந்த நாள் வந்தது. குழந்தை எந்த காரணமும் இல்லாமல் தேம்பி தேம்பி அழுதது. அதேபோல வேகமாக மூச்சு வாங்கி ஒரு கட்டத்தில் அது சுவாச பிரச்னையாக உருவெடுத்தது. உள்ளூர் மருத்துவமனையில் பார்த்தார்கள். எந்த பலனும் இல்லை. தங்களுக்கு தெரிந்த எல்லாவற்றையும் முயன்று பார்த்தார்கள் ஆனால் எதுவும் குழந்தையின் நிலையை மாற்றவில்லை. இப்படியான சூழலில்தான் திருவள்ளூர் மாவட்டத்தில் மியாட் மருத்துவமனை நடத்திய சிறப்பு மருத்துவ முகாமில் பாபுவும், ஹேமாவும் குழந்தையை கொண்டு வந்தனர்.

குழந்தையை பரிசோதித்து பார்த்தபோது அதன் இதயத்தில் துளை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதான் இத்தனை நாட்களாக குழந்தையை வாட்டி வதைத்துக்கொண்டிருந்தது. மருத்துவ மொழியில் சொல்வதெனில் இதனை விஎஸ்டி (VSD- ventricular septal defect) வென்ட்ரிகுலர் செப்டல் குறைபாடு என்று சொல்வார்கள். அதாவது இதயத்தின் கீழ் உள்ள இரண்டு அறைகளை பிரிக்கும் சுவரில் துளை இருக்கிறது. அதேபோல பகுதி ஒழுங்கற்ற நுரையீரல் சிரை வடிகால் (PAPVD) பிரச்னையும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் பிறவி குறைபாடுகளாகும். இதை சரி செய்யாவிடில் உயிருக்கே பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். ஆனால் இதை சரி செய்ய ரூ.3.25 லட்சம் செலவாகும். இவ்வளவு பொருளாதார வசதி இவர்களிடம் கிடையாது. எனவே இந்த குழந்தையை காப்பாற்ற தங்களால் இயன்ற உதவியயை செய்யுங்கள். சிறிய உதவி நிச்சயம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.













Click it and Unblock the Notifications