ஏர்போர்ட் டூ டைடல் பார்க்.. அடித்து தூக்குது ஓசூர்.. யோசிக்க முடியாத வளர்ச்சி.. அசத்தல் சம்பவம்
ஓசூர்: ஓசூர் நகரம் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. பல முக்கிய வளர்ச்சிப் பணிகள் தற்போது திட்டமிடப்பட்டுள்ளன. சில திட்டங்கள் கட்டுமானத்திலும் உள்ளன. கிட்டத்தட்ட பெங்களூர் நகரம் போல வளரும் வகையில் துரிதமான பணிகள் பல ஓசூரில் நடந்து வருகின்றன.
ஓசூர் அருகே விமான நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓராண்டுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பெரியகைப்-பாகலூர் அருகே அமையவுள்ளதாக தெரியவந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட வான்வெளியின் தடையற்ற மேற்பரப்பு (OLS) குறித்த விரிவான ஆய்வுக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஓசூரில் விமான நிலையம்
பெரியகைக்கும் பாகலூருக்கும் இடையில் இந்த விமான நிலையம் அமையவுள்ளது. ஓசூரில் இருந்து பெரியகை 25 கி.மீ. தொலைவிலும், பாகலூர் சுமார் 12 கி.மீ. தொலைவிலும் உள்ளன. இந்த குறிப்பிட்ட இடம் கர்நாடகாவில் உள்ள அத்திப்பல்லியில் இருந்து சுமார் 19 கி.மீ. தொலைவில் உள்ளது. அத்திப்பல்லி, ஓசூரில் இருந்து கர்நாடகாவுக்குள் நுழையும் முக்கிய நுழைவாயிலாகும்.
ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை தமிழக அரசு மூன்று மாதங்களில் தொடங்க உள்ளது. இதற்காக அரசு நியமித்த ஆலோசகர், இரண்டு இடங்களுக்கான தடையற்ற மேற்பரப்பு (Obstacle Limitation Surfaces - OLS) ஆய்வை சமர்ப்பித்துள்ளார். முன்னதாக, டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விமான நிலையம் அமைக்க Taneja Aerospace and Aviation Limited (TAAL) விருப்பம் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
பெங்களூருக்கு இரண்டாவது விமான நிலையம்
பெங்களூருக்கு இரண்டாவது விமான நிலையம் கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. மூன்று இடங்கள் அதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழ்நாடு அரசும் இந்த முடிவை எடுத்துள்ளது. தனியாரால் இயக்கப்படும் தனிஜா ஏரோஸ்பேஸ் அண்ட் ஏவியேஷன் லிமிடெட் (TAAL) விமான நிலையம் உள்ள பெலகொண்டப்பள்ளியை விட பெரியகைப்-பாகலூருக்கு OLS ஆய்வு சாதகமாக இருந்ததால், இந்த இடம் இறுதி செய்யப்பட்டது.
ஓசூரில் டைடல் பார்க்
அதேபோல் ஓசூரில் டைடல் பார்க் உருவாகி வருகிறது. இது ஐந்து லட்சம் சதுர அடி பரப்பளவைக் கொண்டது. இங்கே டைடல் பார்க் திறக்கப்பட்ட பின் 2 ஆயிரம் பேர் வரை பணியில் சேர்க்கப்படுவார்கள் . தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் இதனால் பெருகும். மேலும் பெங்களூரை இணைக்கும் வகையில் செயற்கைக்கோள் நகர சுற்றுவட்டச் சாலை கட்டப்பட்டு வருகிறது. இது சாலை இணைப்பை மேம்படுத்தும்.
ஓசூரின் உள்கட்டமைப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாடு
சூளகிரி சிப்காட் முதல் மற்றும் இரண்டாம் கட்டப் பணிகள் நடைபெறுகின்றன. இது தொழில்துறை வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கிறது. அதேபோல் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், ஓசூரில் உள்ள அதன் புதிய உற்பத்தி நிலையத்தில் ஐபோன் மாடல்களை தயாரிக்க தொடங்கியுள்ளது
டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16e ஆகிய மாடல்களை இங்கே தயாரிக்க தொடங்கி உள்ளது. ஒவ்வொரு எண்ட்-டு-எண்ட் அசெம்பிளி லைனும் 2,500 தொழிலாளர்களை கொண்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முழுமையாக ஆலை செயல்பாட்டிற்கு வந்தது, ஓசூர் ஆலை டாடாவின் விஸ்ட்ரான் ஆலையின் அளவை விட பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கே ஒரு மணி நேரத்திற்கு சுமார் 300-500 ஐபோன் யூனிட்களை தொழிற்சாலையில் தயாரிக்க முடியும் என்று கூறப்பட்டு உள்ளது. இங்கே கிட்டத்தட்ட 2 லட்சம் ஐபோன்களை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் கிளஸ்டர் இங்கே உருவாக்கப்படுகிறது. உலகிலேயே பெரிய ஐபோன் தொழிற்சாலைகளில் ஒன்றாக இது இருக்கும் என்கிறார்கள்.
டாடா எலக்ட்ரானிக்ஸ்
இங்கே போன் 16 மற்றும் 16e மாடல்கள் தயாரிக்கப்படும். கட்டுமானம் முழுமையாக நிறைவடையும் போது, இந்த ஆலை முழு திறனில் 50,000 வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் தனது ஐபோன் அசெம்ப்ளி யூனிட் கூடுதலாக 35 ஆயிரம் பணியாளர்களை பணிக்கு எடுத்துள்ளது.
டாடா எலக்ட்ரானிக்ஸ் தனது ஐபோன் அசெம்ப்ளி யூனிட்டை ஓசூரில் உள்ள புதிய தளத்தில் மேலும் விரிவுபடுத்த உள்ளது. ஏற்கனவே முன்மொழியப்பட்ட விரிவாக்கத்துடன் மேலும் விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே இங்கே 20 ஆயிரம் பணியாளர்கள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது கூடுதலாக 35 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்ட நிலையில் மொத்தமாக 55 ஆயிரம் பேர் பணிக்கு அமர்த்தப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications